Last Updated : 14 Jul, 2016 03:58 PM

 

Published : 14 Jul 2016 03:58 PM
Last Updated : 14 Jul 2016 03:58 PM

கபாலி சட்டவிரோத பதிவிறக்கங்களை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாணு வழக்கு

கபாலி திரைப்படம் வெளியானவுடன், அது ஆன்லைனில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்படுவதை தடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாணு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'கபாலி' பட தயாரிப்பாளர் எஸ். தாணு, இன்று (வியாழக்கிழமை), சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கபாலி திரைப்படம் வெளியானவுடன் அது ஆன்லைனில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், ஜூலை 22-ம் தேதி 'கபாலி' வெளியாக உள்ளது. அதையொட்டி சட்டவிரோத பதிவிறக்கங்களைத் தடுக்க திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணு அளித்துள்ள மனுவில், "'கபாலி' பட வெளியீட்டுக்குப் பிறகு எண்ணற்ற வலைதளங்கள் படத்தை முறைகேடாகப் பிரதியெடுத்து, பதிவேற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) இதில் தலையிட்டு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் முறைகேடான பதிவிறக்கத்தைத் தடுக்க ஆவண செய்யவேண்டும்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திருட்டு டிவிடி எதிர்ப்பு இயக்கத்தையும் வழக்கில் பங்கேற்க இணைத்துக் கொண்டுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட ஒரு வலைதளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை இணைத்து, அதன் மூலம் பார்வையாளர்கள் எப்படி படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளோம். பத்து ரூபாய்க்கும் குறைவாக ஒரு முழு படத்தையும் பதிவிறக்கம் செய்யமுடியும் என்பதையும் நேரடி செயல்விளக்கமாகச் செய்து காண்பித்திருக்கிறோம்.

அந்த ஒரு பிரதியில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பிரதிகள் எடுக்கப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்பனையாகின்றன. அத்தோடு 20 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கும் மொத்தப் படத்தையே பிரதி எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பல கோடி ரூபாய் முதலீட்டில் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x