Published : 01 Jun 2017 05:29 PM
Last Updated : 01 Jun 2017 05:29 PM
எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக சந்தானம் நடிக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கலாய்ப்பு படலத்தை சந்தானத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர் என்று ராஜேஷை சொல்லலாம். 'ஊர்ல பத்து பதினைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் வெச்சிருக்குறவன் எல்லாம் நல்லா இருக்கான், ஒரே ஒரு ஃப்ரெண்டை வெச்சுக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..ஐயைய்ய்யோ', 'நண்பேன்டா' போன்ற ராஜேஷ்- சந்தானம் வசனங்கள் அமோக வரவேற்பைப் பெற்றவை.
இப்போது சந்தானத்தை நாயகனாக வைத்து ராஜேஷ் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ''சந்தானத்திடம் முழு கதையையும் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தைத் தவிர என்னுடைய எல்லா படங்களிலும் சந்தானம் நடித்திருக்கிறார். இப்போது அவரை நாயகனாக வைத்து இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்'' என்றார்.
சந்தானம் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்', 'மன்னவன் வந்தானடி', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'சக்கப்போடு போடு ராஜா' ஆகிய படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT