Last Updated : 11 Feb, 2014 11:05 AM

 

Published : 11 Feb 2014 11:05 AM
Last Updated : 11 Feb 2014 11:05 AM

நடிகர்களுக்காக இயக்குநர்கள் காத்திருக்க கூடாது: இயக்குநர் சசிகுமார்

சசிகுமார், லாவண்யா, சந்தானம், சூரி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'பிரம்மன்'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தினை கமலிடம் உதவி இயக்குநராக இருந்த சாக்ரடீஸ் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மொத்த படக்குழுவினரும் பங்கேற்றார்கள். படப்பிடிப்பு இருந்ததால் சந்தானம் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இயக்குநர் சாக்ரடீஸ் பேசும் போது, " 'பிரம்மன்' உருவாவதற்கு சசிகுமார் தான் காரணம். ஏற்கனவே 2 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருப்பது போல என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அவரிடம் கதை சொல்வதற்கு தான் மிகவும் சிரமப்பட்டேன். அவர் என்றைக்கு கதையை கேட்டுவிட்டு நாமே பண்ணலாம்னு சொன்னாரோ அந்த நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். என் பிரம்மா சசிகுமார் தான் என்றால் அது மிகையல்ல" என்று கூறினார்.

இவ்விழாவில் சசிகுமார், "ஒரு ஆட்டோ டிரைவரா இருந்து முன்னேறி இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் ஆகியிருக்கும் மஞ்சு தமிழிலும் கண்டிப்பாக ஜெயிக்கணும். நான் வெற்றி, தோல்வி இரண்டையும் பார்த்துட்டேன். இந்த படம் தயாரிப்பாளருக்காகவும், இயக்குநர் சாக்ரடீஸுக்காகவும் வெற்றியடையணும்.

நான் ஒரு இயக்குநர். ஒருத்தர் கதை சொல்ல வரும் போது, அவங்களை காத்திருங்கன்னு ஒரு நடிகர் மாதிரி சொல்லி என்னால காத்திருக்க வைக்க முடியாது. என்னை ஒரு நடிகர் அப்படி சொல்லும் போது எனக்கும் அந்த வருத்தம் இருக்கும்.

இயக்குநர்களை எனக்காக காத்திருக்க வைக்க நான் விரும்பவில்லை. இயக்குநர்கள் நடிகர்களுக்காக காத்திருக்காதீங்க. ஒரு இயக்குநர் வந்து ஒரு எழுத்தாளர் , படைப்பாளி மாதிரி. நீங்க தான் பிரம்மன், பிரம்மன் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. படைப்பவன்தான் பிரம்மா, அவன் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது,” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x