Published : 29 Aug 2016 02:25 PM
Last Updated : 29 Aug 2016 02:25 PM
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கமலக் கண்ணன் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியளவில் படத்தின் தயாரிப்பு செலவுகளில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரோடு இப்படத்தின் கதையில் பணியாற்றி வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக இருக்கிறது.
இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி. 250 நாட்கள் படப்பிடிப்பு என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். விஜய், சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இருவருமே இப்படத்தை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சுந்தர்.சி. அவரும் சம்மதம் தெரிவிக்க, விரைவில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகிறது.
இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சுமார் ஒராண்டு படப்பிடிப்பு மட்டும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT