Published : 25 Nov 2013 09:59 AM
Last Updated : 25 Nov 2013 09:59 AM

தமிழ் சினிமாவில் சன்னி லியோன்.. நீலப்பட நடிகை என்பதால் சர்ச்சை

பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனை, தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டமாகக் கூறியிருக்கிறார். இது தமிழ் சினிமாவில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.இதனால் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

சன்னி லியோன் யார்?

கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் பல நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘ஜிஸ்ஷும் 2’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானதன் மூலம் , அதீதக் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி வெகுஜனச் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நட்சத்திரம் ஆகிவிட்டாலும், நீலப்படங்களில் நடப்பதையும் சன்னி லியோன் நிறுத்தவில்லை என்று தெரியவருகிறது. கடந்த ஆண்டும் இவர் நடித்த நீலப்படங்கள், அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

வடகறியில் சன்னி லியோன்

ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நாயகன் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் 'வடகறி' படத்தில்தான் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.சரவண ராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரபலத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தநிலையில் ஒரு பாடலுக்குச் சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

இந்தச் செய்தி இந்து மக்கள் கட்சி அலுவலகத்தையும் எட்டிய நிலையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

“சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால், சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்மாதிரியாக ஆகிவிடும்.எனவே சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே செல்போன் சிப்பிகளிலும், இணையதளங்கள் வழியாகவும் வெளியாகும் நீலப்படம் எனும் நஞ்சை தடுக்க வக்கற்றவர்களாக இருந்து வருகிறோம். காரணம், படுக்கையறை என்பது தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமல்ல, எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தரங்கமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரைதான் தமிழ்ப்பண்பாட்டை பேணிக்காக்க முடியும். இதனால் நீலப்படம் பார்ப்பதும், அதை எதிர்ப்பதும் நமது பண்பாட்டைக் காப்பதில் முக்கியமான செயல்திட்டம் ஆகும். எனவே நீதிமன்றம் சென்றாவது சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதைத் தடுப்போம்” என்று கூறுகிறார்.

போர்னோகிராபி புதிதல்ல

மூடர் கூடம் என்ற படத்தின் மூலம், தரமான இயக்குனராக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நவீன், இதில் எதிர்க்க ஒன்றுமில்லை என்கிறார். “போர்னோகிராபி என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இங்கே வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுந்த படம் என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கிறது. அதை நாம் எதிர்க்கவில்லையே? சில்க் ஸ்மீதாவை நாம் ஒரு கலைஞராக கொண்டாடுகிறோம். அவரும் ‘பி’கிரேட் நீலப்படங்களில் நடித்தவர்தான். சன்னி லியோன் நமது நாட்டில் வந்து முழுநீள நீலப்படங்களில் நடிக்காதவரை அவரை எதிர்க்கத் தேவையில்லை.” என்று கூறும் நவீன் “தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி ஒரு வலிமையான கச்சாப்பொருளாக இருப்பதை நாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x