Published : 23 Nov 2014 09:36 AM
Last Updated : 23 Nov 2014 09:36 AM

சத்ய சாய் பாபா 10

ஆன்மிகத்துடன் அறப்பணிகளையும் செய்துவந்த சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்று (நவம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

›› ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தவர். இயற்பெயர் சத்யநாராயண ராஜு. 14 வயதில் தேள் கடித்ததால் மயங்கி விழுந்த இவர், மயக்கம் தெளிந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அன்று முதல் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது என்பார் அவரது சகோதரர்.

›› ஒருநாள் குடும்பத்தினரை அழைத்து, காற்றில் இருந்து இனிப்பு, விபூதி வரவழைத்துக்கொடுத்தார். பயந்துபோன அப்பாவிடம் இவர், ‘‘நான்தான் சாய் பாபா. ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்’’ என்றாராம். அப்போதிருந்து, ‘சத்ய சாய் பாபா’ என்று அழைக்கப்பட்டார்.

›› புட்டபர்த்தியில் ‘பிரசாந்தி நிலையம்’ என்ற ஆசிரமம் கட்டினார். 1972-ல் சத்ய சாய் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை அமைப்புகள் அமைக்கப்பட்டன. ஆஸ்தி ரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இலவசப் பள்ளி தொடங்கினார்.

›› ஆந்திராவின் வறண்ட பகுதியான ராயலசீமாவில் 12 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு கால்வாய் கட்ட ரூ.200 கோடி வழங்கினார்.

›› பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவர்களுக் கான சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டவர்.உலகம் முழுவதும் 1300 சேவை மையங்களை உருவாக்கியவர்.

›› இவரது சித்து விளையாட்டுகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களும் எழும். இவற்றை சோதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இவருடன் பழகிய பிறகு, குழு உறுப்பினர்களும் இவரது பக்தர்களாக மாறிவிட்டார்கள்.

›› ‘மனித உறவுகள் சத்தியம், தர்மம், அன்பு, அஹிம்சை, அமைதி அடிப்படையில் இருக்கவேண்டும். தனக்குள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் உணரவேண்டும்’ என்று போதித்தார்.

›› இவரது பேச்சு, கொள்கையை விளக்கி பல புத்தகங்கள் வந்துள்ளன. இவரைப் பற்றிய ‘சனாதன சாரதி’ என்ற மாதப் பத்திரிகை 25 மொழிகளில் வெளிவருகிறது.

›› இவரது பேச்சு, செயல் எல்லாமே ஜாதி, மதங்களைக் கடந்தவை. பிற மத பக்தர்களை ஒருபோதும் இவர் இந்து மதத்துக்கு மாற்ற முயன்றது இல்லை. மதவெறி, மொழிவெறியை கண்டித்த பாபா, பாரம்பரியம் மீதான பற்று அவசியம் என்று கூறியுள்ளார்.

›› அன்பே அனைத்து மதங்களுக்கும் அடிப்படை என்று கூறிய சத்ய சாய் பாபா கடந்த 2011-ல் தமது 85-வது வயதில் காலமானார். அவரது அறப்பணிகளை பக்தர்கள் தொடர்ந்து செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x