Last Updated : 27 Jun, 2016 04:39 PM

 

Published : 27 Jun 2016 04:39 PM
Last Updated : 27 Jun 2016 04:39 PM

கபாலியில் புரட்சியாளராக ரஜினி: இயக்குநர் ரஞ்சித் தகவல்

'கபாலி'யில் ரஜினி புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் 'கபாலி' படத்தின் தமிழ் பதிப்பின் இசை இணையத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 27) தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இசை வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஞ்சித் பதிலளித்தார். அதில், "'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தேன். அப்போது ரஜினி சாரோடு பணிபுரியும் வாய்ப்பு வந்தது. பல பெரிய இயக்குநர்கள் ரஜினி சாரோடு பணிபுரிய ஆசைப்படும் போது, ரஜினி சார் என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

படத்தில் 2 கெட்டப்களில் தோன்றுவார் ரஜினி சார். அவருடைய இளமையான தோற்றத்துக்காக 80 - 90களில் உள்ள ரஜினி சாரின் திரைப்படங்களை வைத்து வடிவமைத்தேன்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை கொத்தடிமைத் தொழிலாளிகளாக மலேசியாவுக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்க்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தப் படத்தில் ரஜினி சார் ஒரு புரட்சியாளராக நடித்திருக்கிறார். தமிழர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமன்றி, தன் மக்களைக் காப்பாற்ற டானாகவும் மாறுகிறார்.

என்னைப் பொறுத்தவரை 'முள்ளும் மலரும்' திரைப்படம் அவருடைய சிறந்த நடிப்பு என கூறுவேன். 'கபாலி'யில் அதையும் தாண்டி நடித்திருக்கிறார். அனைவருமே இது ஆக்‌ஷன் படம் என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால், 'கபாலி' ஒரு உணர்ச்சிகரமான படமும் கூட" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x