Last Updated : 11 Dec, 2013 12:00 AM

 

Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை - இயக்குநர் சரவணன்

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சரவணன். விகரம் பிரபுவை வைத்து இவர் இயக்கிய ‘இவன் வேற மாதிரி’, இந்த வாரம் ரிலீஸாகவுள்ள நிலையில் தனது மூன்றாவது படத்துக்கு தயாராகிவிட்டார் சரவணன். இதற்காக மூன்று கதைகளின் திரைக்கதைகளை பக்காவாக தயாரித்துள்ள இந்த துடிப்பான இயக்குநரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் கொடுத்த பிறகு உடனடியாக உங்களிடம் இருந்து அடுத்த படத்தை எதிர்பார்த்தோம். ஆனால் உங்கள் அடுத்த படத்துக்கு நீண்ட நாட்களாகி விட்டது. ஏன் இந்த தாமதம்?

எந்த கதைக்களத்தை எடுத்தாலும் சுவாரஸ்யமான இடத்தைப் பிடித்து கதையை நகர்த்த வேண்டும். அதுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. இந்தப்படத்தை பொறுத்தவரை முதலில் ஆர்யாவிடம் கதையை சொன்னேன். அவர் ‘ஈர்ப்பாக இல்லை’ என்று மறுத்துவிட்டார். அவருக்கு அடுத்து யாரைப் பிடிப்பது என்பதிலேயே சில மாதங்கள் ஓடின. அப்போதுதான் ‘கும்கி’ டிரெய்லர் ரிலீஸானது. விக்ரம் பிரபுவிடம் கதையை சொன்னேன். அவருக்குப் பிடித்துப்போக நடித்தார். தாமதமாக வந்தாலும் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பேன் என்று நம்புகிறேன்.

சமூகத்திற்கு ஏதாவது ஒரு விஷயத்தை சொல்வதை உங்களது பாணியாக தொடர்ந்து கடைப்பிடிப்பீர்களா?

அப்படி ஒரு வட்டத்தை போட்டுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அதை உடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆக் ஷன், காமெடி, லவ் எது தோணுதோ அதை அழகா செய்யணும். முந்தைய படத்தில் விபத்தை ஒரு மையமாக வைத்து மற்றவர்களை எப்படி சம்பந்தப் படுத்தினோம் என்பதைத்தான் சொல்லியிருப்பேன். இந்தப்படத்தில் சட்டக்கல்லூரி சம்பவத்தை ஆரம்பத்தில் ஒரு சின்ன தேவைக்காக பயன்படுத்தி யிருக்கிறோம். அடுத்தடுத்து கதை வேறொரு இடத்தை நோக்கி பயணமாகும். இதுமாதிரி தொடர்ந்து சின்ன சின்ன நடப்பு விஷயங்களை அங்கங்கே சொல்கிறேன்.

பொதுவாக இயக்குநர்கள் மற்ற மொழிப்படங்களை தேடித்தேடி பார்ப்பார்கள். நிறைய புத்தகங்களை படிப்பார்கள். ஆனால் உங்களுக்கு இதிலெல்லாம் நாட்டம் இல்லையாமே?

ஆமாம். என் நண்பர்கள் எல்லோரும் பல நாட்டு படங்கள், பல முக்கிய இயக்குநர்களின் பெயரைச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கும்.

அந்த படங்களை நானும் பார்க்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அப்படி நினைப்பதோடு சரி. பார்ப்பது இல்லை. புத்தகங்களும் அப்படித்தான். வாரம் முழுக்க படித்தாலும் 200 பக்கங்களை தாண்டுவதே கஷ்டம்.

இதெல்லாம் இல்லாமல் பிறகு எப்படி சினிமா என்று நீங்கள் கேட்கலாம். காரணம் எங்கள் ஊர் நாமக்கல், வரகூர் அருகில் இருந்த டூரிங் டாக்கீஸ். சின்ன வயதில் பார்த்த நம்ம ஊர் படங்கள். ரிலீஸாகி 6 மாதங்களுக்கு பின் தீபாவளி, பொங்கலுக்கு எங்க ஊருக்கு புதுவரவாக வந்து திரையிட்ட எத்தனையோ விழாக்கால படங்கள்தான் என் சினிமா பயணத்துக்கு காரணம்.

உங்க படத்தோட நாயகி சுரபியைத் தேடி டெல்லி வரைக்கும் போயிருக்கீங்களே?

நம்ம ஊர்ல அழகான, திறமையான பொண்ணுங்க இருக்காங்க. ஆனால் எல்லோரும் நடிக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமா இருக்காங்க. ரொம்பவே தயங்குறாங்க. கேரளா, பெங்களூர்னு தேடிப் பார்த்ததில் கிடைத்தவங்கதான், சுரபி.

உங்கள் அடுத்த படம்?

கதை தயாரா இருக்கு. யார்கூட பண்ணப்போறோம்னு இன்னும் முடிவாகவில்லை. அடுத்து இயக்குவது முழுக்க முழுக்க ஆக் ஷன் படம். ஹீரோதான் செட் ஆகல

நீங்களே நடிக்க வந்துட்டா இதுமாதிரியான இடையூறுகள் இருக்காதே?

அந்த எண்ணம் இல்லை. நல்ல இயக்குநர் லிஸ்ட்ல என்னோட பேரும் வரணும். ‘‘நல்ல படம், அழகா சொல்லியிருக்கானே’’ என்று பாராட்டை வாங்குற 4,5 இயக்குநர் களில் சரவணனும் ஒருவனா இடம் பிடித்தால், அதுவே போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x