Published : 21 Jan 2014 11:17 AM
Last Updated : 21 Jan 2014 11:17 AM

படப்பிடிப்பு தளத்தில் நண்பர்களாக வலம் வரும் சிம்பு, நயன் ஜோடி!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது புதிய படத்துக்கு சிம்புவை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் நாயகி தேர்வில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இறுதியில் கதைக்கு நடிகை நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்ற யோசனை எழுந்தது.கதை சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஜனவரி முதல் வாரத்தில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள். புத்தாண்டை ஒட்டி நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு பொங்கல் விடுமுறையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக சிம்பு - நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கும் இருவரும் முதல் நாள் படப்பிடிப்பு முதலே உற்சாகமான நண்பர்களாக பேசிப் பழகி வருகிறார்களாம். மதிய உணவு இடைவேளையின்போது இருவரும் படக்குழுவினருடன் உணவை பகிர்ந்து உண்டு, சகஜமாக பழகி வருகின்றனர். தொடர்ந்து இந்த வார இறுதி வரை இருவரும் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கும் சூழலில் சிம்பு- நயன் தாராவின் காதல் காட்சிகள் சிறப்பாக படமாகி வருவதில் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர், படக்குழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x