Published : 21 Jun 2017 10:11 AM
Last Updated : 21 Jun 2017 10:11 AM

திரைப்படமான ஜல்லிக்கட்டு போராட்டம்: இயக்குநர் சந்தோஷின் புதிய முயற்சி

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு ‘ஜல்லிக்கட்டு: 5 - 23 ஜனவரி 2017’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ். இப்படத்தைப் பற்றி அவரிடம் பேசியதில் இருந்து..

மெரினாவில் போராட்டம் நடைபெற்றபோது, அதைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல் நாள் மாலை 4 மணிக்கு மெரினாவுக்கு சென்றோம். அங்குக் கூடியவர்கள் யாருமே திரும்பிச் செல்வதாகத் தெரியவில்லை. அவர்களை யார் அழைத்தார்கள்?, எப்படிக் கூடினார்கள் என்பதே தெரியவில்லை. தலைவனே இல்லாமல் அந்தப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட எழுச்சி மிகு போராட்டத்தை சும்மா ஒளிப்பதிவு செய்து வைப்போம், பின்னால் எதற்காவது உபயோகப்படும் என்று நினைத்து படம் பிடிக்கத் தொடங்கினேன்.

கூட்டம் அதிகமாகத் தொடங்கியதும் என் நண்பர்களையும் உதவிக்கு அழைத்தேன். எகிப்தில் நடந்த போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘Clash' என்ற திரைப்படம்தான், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் படமாகச் செய்ய எனக்கு தூண்டுகோலாக இருந்தது.

போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த பிறகு, அதன் பின்னணியில் ஒரு கதையை எப்படி உருவாக்கினீர்கள்?

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும் என்பதால் அதைத் தெரிந்துகொள்ள அங்குள்ள சிலரிடம் பழகத் தொடங்கினேன். அதில் 10 நபர்களை 10 கேமராக்கள் வைத்து ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினோம். அந்த 10 பேரில் 5 கதாபாத்திரங்களை எடுத்து ஒரு கதையை உருவாக்கினேன். இப்படத்தின் ஒவ்வொரு கிளைக் கதையும் முக்கியமான கதையில் போய் இணையும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடந்த விஷயங்கள் இந்த 5 கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது என்பது திரைக்கதையாக இருக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை கேமரா வில் ஒளிப்பதிவு செய்யும்போது, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. அன்றைய தினம் மட்டும் 13 லட்சம் பேர் மெரினாவில் இருந்ததாக செய்தித்தாள்களில் படித்தேன். இது ஒரு பெரிய சாதனை இல் லையா? இந்த உணர்வைப் பெரியதிரையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இப்படத்தை உருவாக்கினேன். ஜனவரி 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடந்த போராட் டத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பதால் படத்துக்கு ‘ஜல்லிக்கட்டு: 5 - 23 ஜனவரி 2017’ என்று தலைப்பு வைத்துள்ளேன்.

போராட்டக் களத்தில்தான் நடிகர்களைத் தேர்வு செய்தீர்களா?

ஆமாம். இதில் நடித்துள்ள 5 பேரும் புதியவர்கள். ஜல்லிக் கட்டு போராட்டத்துக்கு வந்த வர்களைக் கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளேன். ஒரு சிலர் 5 நாட்கள் நடித்துவிட்டு, வீட்டில் திட்டுகிறார்கள் என ஓடிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவரைப் பிடித்து நடிக்க வைத்தேன். இப் படிப் பல கஷ்டங்களை இப் படத்துக்காக சந்தித்துள்ளேன்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் சில சர்ச்சைகள் எழுந்ததே. அதை இப்படத்தில் எப்படி கையாண்டிருக் கிறீர்கள்?

மெரினா போராட்டத்தில் என்ன நடந் ததோ, அதை அப்படியே கூறியுள்ளோம். எனது சொந்தக் கதையைப் புகுத்தி, படமாக்கவில்லை. நீங்கள் அனைவரும் நிஜத்தில் பார்த்ததை, என் படத்திலும் பார்க்கலாம்.

லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் ஹாப் ஆதி எனப் பல நடிகர்களும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் படத்தில் கூறியுள்ளீர்களா?

ஆர்.ஜே.பாலாஜி, கிரண்பேடியிடம் ஒரு விவாத மேடையில் பேசியிருப்பார். அது படத்தில் உள்ளது. போராட்டம் நடை பெறும்போது 2 பேர் மட்டும் போய் சிலரை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருப்பார்கள். அதை மட்டும் மறுபடியும் உருவாக்கியுள்ளேன். படமாகப் பார்க்கும்போது, நான் எதை மறுபடியும் உருவாக்கினேன் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் கதையின் ஓட்டம் அந்தளவுக்கு இருக்கும்.

நிஜக் காவல்துறை அதிகாரிகளை வைத்துப் படமாக்க முடியாது என்பதால் அவர்கள் இடம்பெறும் காட்சிகளை மட்டும் வேறொருவரை வைத்து எடுத்தோம். படத்தில் இருப்பவை அனைத்துமே உண்மை சம்பவங்கள். மெரினா போராட்டத்தை நான் உருவாக்கவில்லை. ஆனால், அதன் பின்னணியில் நடக்கும் கதையை நான் உருவாக்கியுள்ளேன்.

இதில் பாடல்களை எப்படி இணைத்தீர்கள்?

போராட்டத்தின்போது நிறைய பெண்கள் பறை யடித்து நடனமாடினார்கள். அதை அப்படியே பட மாக்கி, அதற்குப் பின்னணி யில் நாங்கள் உருவாக் கிய பாடல்களை வைத் துள்ளோம். சிங்கப்பூர், ஜப்பான், வட அமெரிக்கா உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டக் காட்சிகளும் ஒரு பாடலின் பின்னணியில் இருக்கும்.

உங்கள் படக்குழுவைப் பற்றி?

என் மனைவி நிருபமாதான் படத்தின் தயாரிப்பாளர். இப்படத்தை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியவுடன், என்னுடைய நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தார்கள். எஸ்.கே.பூபதி ஒளிப் பதிவு செய்துள்ளார். ரமேஷ் விநாயகம் இசை, காசி விஸ்வநாதன் எடிட்டிங், உதயகுமார் பின்னணி சத்தம் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அனுராக் காஷ்யப் உள்ளார்.

சந்தோஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x