Last Updated : 13 Nov, 2013 12:17 PM

 

Published : 13 Nov 2013 12:17 PM
Last Updated : 13 Nov 2013 12:17 PM

மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன் : ஏ.ஆர்.முருகதாஸ்

மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய், காஜல் அகர்வால், வித்யூத் ஜாம்வால், சத்யன் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'துப்பாக்கி'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, தாணு தயாரித்திருந்தார்.

நவம்பர் 13, 2012ல் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. விஜய்யின் வித்தியாசமான லுக், பரபரப்பான திரைக்கதை, பாடல்கள் என அனைத்து விதத்திலும் மக்களை கவர்ந்தது.

'துப்பாக்கி' படம் வெளியான ஒரு வருடம் ஆனதையொட்டி, ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் #ThuppakkiDay, #VijayFansThankARMurugadossForThuppakki என்ற 2 ஹாஷ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகிறது.

'துப்பாக்கி' வெளியாகி ஒருவருடம் ஆகியிருக்கும் இந்நாளில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ இந்த சந்தோஷமான தருணத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைய இருப்பது குறித்து செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்யுடன் சமந்தா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x