Published : 12 Aug 2016 12:07 PM
Last Updated : 12 Aug 2016 12:07 PM

அமெரிக்க விமான நிலையத்தில் 3-வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட நடிகர் ஷாருக்கான்: அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்

அமெரிக்க விமான நிலையத்தில் 3-வது முறையாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டு 2 மணி நேரம் வரை சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியுடன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் சென்றதும், நீட்டா அம்பானியை நாட்டுக்குள் செல்ல அனுமதித்த அமெரிக்க குடியுரிமை அதிகாரி கள், ஷாருக்கானை மட்டும் தடுத்து நிறுத்தினர். அத்துடன் அவரது உடைமைகளை சோதித்து விட்டு, 2 மணி நேரத்துக்கு பின் அவர் செல்ல அனுமதி அளித்தனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நடிகர் ஷாருக்கான் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். அதே சமயம் ஒவ்வொரு முறையும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் என்னை அவமதிப்பது போல நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் மன்னிப்பு கோரி நடிகர் ஷாருக்கானுக்கு ‘ட்விட்டரில்’ செய்தி அனுப்பினார். அதில், ‘‘விமானநிலையத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவும், இந்த சம்பவத்துக்காக நடிகர் ஷாருக்கானிடம் ‘ட்விட்டரில்’ மன்னிப்பு கோரினார். அதற்கு ‘ட்விட்டரில்’ பதில் அளித்த ஷாருக்கான், ‘‘எந்த பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பு மரபுகளுக்கு மதிப்பு கொடுக்கிறேன். அதை தவிர பெரிதாக வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. வருத்த மடைந்ததற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக்கான், ‘‘எப்போ தெல்லாம் எனக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது என உணர் கிறேனோ, அப்போதெல்லாம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வந்துவிடுவேன். இங்குள் அதிகாரிகள் நானொரு மிகப் பெரிய நடிகர் என்ற ஆணவத்தை எளிதாக அடக்கி விடுகின்றனர்’’ என நகைச்சுவையுடன் மாணவர் கள் மத்தியில் பேசினார்.

அமெரிக்காவில் நடிகர் ஷாருக் கானை பாதுகாப்பு அதிகாரிகள் இப்படி நடத்துவது முதல் முறை யல்ல. ஏற்கெனவே கடந்த 2009-ல் நியூஜெர்சி விமான நிலையத்தி லும் 2012-ல் நியூயார்க் விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தி முழுமையாக சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x