Last Updated : 31 Mar, 2014 12:10 PM

 

Published : 31 Mar 2014 12:10 PM
Last Updated : 31 Mar 2014 12:10 PM

கோச்சடையான் பல வருடங்கள் திரையரங்குகளில் ஓடும்: அமிதாப் புகழாரம்

'கோச்சடையான்' திரைப்படம் பல வருடங்கள் திரையரங்குகளில் ஓடும் என்று ’கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டு அமிதாப் பச்சன் கூறினார்.

'கோச்சடையான்' படத்தின் இந்தி டிரெய்லரை, மும்பையில் அமிதாப்பச்சன் வெளியிட்டார். அவ்விழாவில் ரஜினிகாந்த், சேகர் கபூர், ஐஸ்வர்யா ராய், கஜோல், அனுபம் கெர், ரமேஷ் சிப்பி, சுபாஷ் கய், பால்கி உள்ளிட்ட பல இந்தி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

'கோச்சடையான்' டிரெய்லரை வெளியிட்டு அமிதாப் பச்சன் பேசியது, "'கோச்சடையான்' படத்தினை ஒரு பெண் இயக்கியிருக்கிறார் என்ற போது பாராட்ட வார்த்தைகள் இல்லை. செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு படி மேலே சென்று, இந்தியாவில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்.

ரஜினியும் நானும் குடும்ப நண்பர்கள் போல. நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். அவரது தன்னடக்கத்தை கண்டு வியக்கிறேன். நடிப்பைத் தவிர, வாழ்க்கையைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நிறைய பேசிக் கொள்வோம்.

'ரோபோ' படத்தின் போது, தனது வேலை மிகவும் போர் அடிப்பதாக கூறினார். உடனே 'நடிப்பதை நீங்க நிறுத்தக் கூடாது' என்று கூறினேன். இப்போது என்ன செய்திருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

சினிமா ரசிகர்களுக்கு ஏதாவது புதிதாக செய்து கொண்டே இருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றை எழுதும் போது 'கோச்சடையான்' படத்திற்கு முன், 'கோச்சடையான்' படத்திற்கு பின் என இருவகையாக எழுதலாம்.

தென்னிந்தியாவில் ரஜினி படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறு கிடைத்தால் கூட, நீங்கள் கைத்தட்டல்களையும், விசில் சத்தங்களையும் மட்டுமே கேட்க முடியும். 'கோச்சடையான்' திரைப்படம் பல வருடங்கள் திரையரங்குகளில் ஓடும்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x