Published : 03 Nov 2014 03:00 PM
Last Updated : 03 Nov 2014 03:00 PM

"என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா.." - பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியினை கிண்டல் செய்து நிகழ்ச்சி ஒன்று செய்தார்கள். அந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. பலரும் "என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..", "போலீஸைக் கூப்பிடுவேன்.." என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, வசனங்கள் பிரபலமானது.

YOUTUBE-ல் பதிவேறிய அந்நிகழ்ச்சியினை இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தினைத் தொடவிருக்கிறது. முதன் முறையாக தனது நிகழ்ச்சியினை கிண்டல் செய்ததற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

"அந்நிகழ்ச்சியை செய்தவர்கள் என்னை பிரபலமாக்கிவிட்டார்கள். ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா அப்படினு நானே சொல்லி என்னை கலாய்க்க போறாங்கனு நினைக்கிறேன். இப்படி பண்ணீங்கன்னா போலீஸை கூப்பிடுவேன் என சொன்னதை பிடித்துக் கொண்டார்கள்.'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியே ஒரு பிரபல நிகழ்ச்சி. இவர்கள் கிண்டலுக்குப் பிறகு இன்னும் பிரபலமாகிவிட்டது.

நான் நிறைய நிகழ்ச்சிகளுக்கு போகும் போது, நிறைய புகைப்படங்கள் எடுக்கிறார்கள். நிறைய பேர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று என்னைப் பார்த்து கேட்கிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால், நமது திரையுலகில் ஒரு புதிய காமெடியன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை கலாய்க்கிறாங்க என்று தெரியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருப்பார். அப்படி என்னையும் கிண்டல் செய்கிறார்களோ என சந்தேகம் வந்துவிட்டது. நானே அந்த கிண்டல் வீடியோவை சந்தோஷத்தோடு பார்த்தேன்.

என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் நிகழ்ச்சியோட CONTENT, அதில் வருகிற மக்கள் போன்றவற்றை கிண்டலடிக்கக் கூடாது. அந்நிகழ்ச்சிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, டி.ஆர்.பி ரேட்டிங் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நான் சிறப்பாக செய்து வருகிறேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். நான் வருத்தப்பட மாட்டேன். மகிழ்ச்சியே" என்று கூறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x