Last Updated : 02 Nov, 2014 12:08 PM

 

Published : 02 Nov 2014 12:08 PM
Last Updated : 02 Nov 2014 12:08 PM

டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் மாற்றம்: மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் டிக்கெட் பரிசோதகர்களுக்கான சீருடையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் சுமார் 3,800 பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதில் சராசரியாக ஒரு நாளைக்கு 54 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதன்மூலம் தினசரி ரூ.3.13 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. மாநகர பஸ்களில் வருவாய் குறையாமல் இருக்கும் பணியை மேற்கொள்வதில், டிக்கெட் பரிசோதகர்களின் பங்கு மகத்தானது. இந்நிலையில் டிக்கெட் பரிசோதகர்களின் வழக்கமான காக்கிச் சீருடையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காக்கிச் சட்டைக்குப் பதிலாக அவர்கள் வெள்ளைச் சட்டை அணிய விரை வில் உத்தரவிடப்படவுள்ளது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

மாநகர பஸ் டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையை, பார்த்ததும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், வெள்ளை-காக்கி நிறத்துக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற போக்குவரத்துக் கழகங்களில் வெள்ளை மற்றும் காக்கிச் சீருடையையே பரிசோதகர்கள் அணிந்து வருகிறார்கள். அதனால் இங்கும் அந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் இது அறிமுகப் படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு டிக்கெட் பரிசோதகர்களில் ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். காக்கி சீருடை கம்பீரமாக இருக்கிறது என்று அவர்கள் கருதுவதே அதற்குக் காரணம். அதே நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், தங்களது பெயர் மற்றும் பணியாளர் எண் ஆகியவை குறிப்பிடப் பட்டுள்ள பேட்ஜ்களை அணி வதில்லை என்ற புகாரும் பயணிகளிடையே பரவலாக உள்ளது. அதனை இனியாவது கட்டாயம் அமல்படுத்தவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x