Published : 01 Sep 2016 07:25 PM
Last Updated : 01 Sep 2016 07:25 PM
கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக ஷரதா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால், பிரயாகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கினார் இயக்குநர் கண்ணன். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
தற்போது கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் கண்ணன். செப்டம்பர் 12-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷரதா ஸ்ரீநாத். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'காற்று வெளியிடை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷரதா ஸ்ரீநாத். இவர் கன்னடத்தில் வெளியான 'யு-டர்ன்' படத்தின் மூலமாக பிரபலமானவர்.
தற்போது இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆஷாஸ்ரீ தயாரிக்க இருக்கிறார். சென்னையிலே முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT