Published : 28 Jun 2017 08:27 PM
Last Updated : 28 Jun 2017 08:27 PM
ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தில், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார்கள்.
சினிமா டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கும் வகையில், திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முன்னணி திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சினிமா டிக்கெட் விற்பனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னணி திரையரங்க உரிமையாளரிடம் பேசிய போது, "சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் இனிமேல் ஜிஎஸ்டி வரி சேர்த்து 120 ரூபாய் விற்கப்படும். 120 ரூபாய் விற்கப்படும் டிக்கெட் இனிமேல் 153 ரூபாய் விற்கப்படும். ஒரு சிலர் 153 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய் விற்க முன்வந்துள்ளார்கள். அந்த முடிவு திரையரங்க உரிமையாளர்களின் கையில் விட்டுவிட்டோம்.
இந்த விலையின்படி டிக்கெட் விற்பனையை ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த விலையை வைத்தே, டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளோம்.
சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை இன்னும் தெளிவாக அரசு விளக்கவில்லை. ஒருவேளை, தற்போது நாங்கள் செலுத்தி வரும் 30% நகராட்சி வரியும் செலுத்த வேண்டும் என்று அரசு கூறினால், எங்களால் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் ஏற்படும். நகராட்சி வரியை தமிழக அரசு விதித்தால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்.
ஏனென்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் யாவுமே நகராட்சி வரியை ரத்து செய்து ஜிஎஸ்டி மட்டுமே என அறிவித்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் அறிவிக்க முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT