Published : 02 Apr 2017 01:55 PM
Last Updated : 02 Apr 2017 01:55 PM
'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இறுதி நாளில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு வந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. மற்ற பணிகளையும் படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றார். படக்குழுவினர் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், படக்குழுவினருக்கு பெரும் வெற்றியடைய தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், "இதைவிட சிறப்பான தருணம் இருக்க முடியாது. படப்பிடிப்பு தளத்தில் அப்பா. தனுஷுக்கு நன்றி. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி 'வேலையில்லா பட்டதாரி' வெளியானது. இந்த ஆண்டு, ஜூலை 18-ம் தேதி செவ்வாய்கிழமையாக இருப்பதால், ஜூலை 14-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது.
'வேலையில்லா பட்டதாரி 2' படப்பணிகள் முடித்தவுடன், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT