Published : 17 Mar 2017 02:45 PM
Last Updated : 17 Mar 2017 02:45 PM
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே இணையத்தில் கசிந்தது. இது குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி விளக்கமளித்துள்ளார்.
ஐதராபாத்தில் 'பாகுபலி 2' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த ராஜமெளலி, "ஃபேஸ்புக் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே 'பாகுபலி 2' ட்ரெய்லர் கசிந்தது என்றார். ஆனால், அது குறித்து கூடுதல் தகவல் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அவர் மேலும் கூறும்போது, "திருட்டு என்பது வேறு கசிவு என்பது வேறு. 'பாகுபலி 2' ட்ரெய்லர் கசிந்துவிட்டது என்ற தகவல் ஒட்டுமொத்த படக்குழுவையும் எரிச்சலடையச் செய்தது. ஆனால், இதற்காக யாரையும் குறைகூறுவதற்கு இல்லை" எனக் கூறினார்.
இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய ராஜமெளலி "'பாகுபலி' முதல் பாகம் உணர்வுபூர்வமான காட்சிகள் சற்று குறைவாகவும் பிரம்மாண்டம் அதிகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் உணர்வுகளும் பிரம்மாண்டமும் சரிவிகிதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ட்ரெய்லருக்கான பணிகளை மேற்கொண்டபோது ஒருவிதமான பதற்றம் என்னை தொற்றிக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது ட்ரெயலரை பார்த்தபின்னர் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதுவும் கீரவாணியின் பின்னணி இசையில் ட்ரெய்லர் நான் எதிர்பார்த்திருந்ததைக் காட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT