Published : 08 Jan 2017 05:27 PM
Last Updated : 08 Jan 2017 05:27 PM

ஆஃப்டர் த ஸ்டாம்: உறவுகளைப் பிணைக்கும் புயல்!

AFTER THE STORM / UMI YORI MO MADA FUKKU | DIR: HIROKAZU KOREEDA | JAPAN | 2016 | 117'

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மிக முக்கியமான படங்களில் ஒன்று 'ஆஃப்டர் த ஸ்டாம்'.

உலக சினிமா வரலாற்றில் ஜப்பானின் பங்கு அளப்பரியது. குரோசுவா, ஓசூ, மியாசகி, கோபயாஷி போன்ற திரை மேதைகள் ஆட்சி செய்த பிரதேசம். இவர்கள் அமைத்துக்கொடுத்த மேடையில் நின்று காத்திரமான படைப்புகளை தந்து கொண்டிருக்கும் திரை மேதைகளில் ஒருவர் ஹிரோகாஸு கொரிதா. இவரது முந்தைய படைப்புகளான 'நோபடி நோஸ்', 'ஆப்டர் லைஃப்', 'ஸ்டில் வாக்கிங்', 'லைக் பாதர் லைக் சன்' போன்றவை மிக முக்கியமானவை.

இத்தகைய பெருமை மிகு வரிசையில் இடம் பெறத்தக்க வகையில் 2016-ல் உருவாக்கி தந்த படம்தான் 'ஆஃப்டர் த ஸ்டாம்'.

புயல் வீசும் ஓர் இரவை நோக்கி மெல்ல நகரும் திரைக்கதை ஓர் ஏழை எழுத்தாளனின் வாழ்க்கையில் வீசிய புயலின் பாதிப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது 'ஆஃப்டர் த ஸ்டாம்'.

ஓர் எழுத்தாளன், அவனது முன்னாள் மனைவி, மகன், தாயார் என நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்தான் இத்திரைக்கதையை தாங்கி நிற்கும் தூண்கள்.

தனியார் துப்பறியும் அமைப்பில் வேலை செய்துகொண்டு சின்னச்சின்ன 'கோக்குமாக்குகள்' செய்து பணம் திரட்டுகிறான் நாயகன். லாட்டரி, பந்தயம் போன்றவற்றிலும் ஈடுபட்டு பணம் திரட்ட முயல்கிறான்.

இத்தனையும் எதற்காக?

விவாகரத்தான மனைவிக்கு 'மாதாந்திரச் செலவிற்காக' நீதிமன்றம் நிரணயித்த தொகையை தருவதற்காக.

ஒரு புயல் வீசும் இரவு இவர்கள் வாழ்வில் மகத்தான பங்களிப்பை செய்கிறது. பிரிந்திருந்த உறவுகள் இறுக்கமாகின்றன.

இனி இவர்கள் வாழ்க்கை நெருக்கமாக பயணிக்கும் என்பதை கோடிட்டு காட்டும் திரைக்கதைதான் இப்படத்தில் வீசும் புயலைப்போல வலுவாக இருக்கிறது.

சென்னையில் நடக்கும் ஒரு வாழ்க்கையை எடுத்துக்காட்ட தனது திரைக்கதை பயணத்தை கன்னியாகுமரியில் துவங்குவார் கொரிதா. மெல்ல தனது வட்டங்களை சுருக்கி இறுதியில் எட்டுக்கு எட்டுக்கு அறையில் தனது திரைக்கதையை சுழல விடுவார். இந்த சுழற்சியில் பார்வையாளனுக்கு கிடைக்கும் அலாதி அனுபவம் அளப்பரியது.

இறுதி சுழற்சியில் பார்வையாளர் ஒவ்வொருவரையும் திரைக்கதை எழுத வைத்து விடுவார் கொரிதா. இந்தக் கலையில் மன்னன் கொரிதா.

பட்டாம்பூச்சியை மறைந்த முன்னோர்களாக கருதும் ஜப்பானிய நம்பிக்கையை தனது படங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்துவார் கொரிதா. 'ஆப்டர் த ஸ்டாம்' திரைப்படத்திலும் மிக அற்புதமாக இக்காட்சியை இணைத்து இருக்கிறார்.

சென்னை சரவதேச திரைப்பட விழா தந்த மிக முக்கியமான நன்கொடை 'ஆஃப்டர் த ஸ்டாம்'.

>| உலக சினிமா ரசிகனின் ஃபேஸ்புக் பக்கம் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x