Published : 28 Oct 2015 09:16 PM
Last Updated : 28 Oct 2015 09:16 PM

மலேசியாவில் ரஜினி திருவிழா

மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இது திருவிழாக் காலம். ‘கபாலி’ படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் மலேசியா செல்ல, அவரை ஒருமுறையாவது பார்த்துவிடும் ஆவலில் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ரஜினியும் அவர்களின் அன்பு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார். ரசிகர்கள் பலரும் தாங்கள் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட படங்களை ஆர்பிஎஸ்ஐ (RBSI - Rajini Biggest Superstar Of India) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உதவியோடு மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்களில் ஒருவரான தனபாலிடம் பேசினோம். “எனது முழுப்பெயர் தனபால் ராஜகோபால். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில்தான். பனகா நகரில் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே நான் ரஜினி ரசிகன் தான். நான் இன்றைக்கு தமிழ் பேசுகிறேன், படிக்கிறேன் என்றால் அதற்கு ரஜினி சார்தான் காரணம். அவரைப் பற்றிய செய்திகள், புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் தமிழ் கற்றுக் கொண்டேன். ரஜினி சாரைப் பார்க்க இரண்டு முறை சென்னை வந்தேன். அவருடைய வீட்டு வாசல் வரை சென்றும் என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை.

தற்போது ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடப்பது தெரிந்ததும் எப்படியாவது ரஜினி சாருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். என் மனைவி வனிதாவின் அண்ணன் நல்லகுமார், மலாகா கவர்னர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். ‘ரஜினிகாந்த் கவர்னர் அலுவலகத்துக்கு வருகிறார்’ என்று அவரிடம் இருந்து தகவல் கிடைத்ததும் நானும் என் மனைவியும் அங்கு சென்றோம்.

எங்களின் இடத்தில் இருந்து மலாகா கவர்னர் அலுவலகத்துக்கு சுமார் 5 மணி நேர பயணம். பயண நேரம் முழுவதும் ரஜினி சாரிடம் என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

கவர்னர் மாளிகைக்கு வந்த ரஜினி சார் நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்றுவிட்டார். எனக்கு அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பேட்டியை முடித்துவிட்டு மதியம் 1 மணிக்கு கீழே வந்தார். அப்போது நல்லகுமார் எங்களை அவரிடம் அழைத்துச் சென்றார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினி சாரைப் பக்கத்தில் பார்த்தவுடன் அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.

நான் காலில் விழுந்ததும் அவர் ‘ஐயோ’ என்று என்னைத் தூக்கிவிட்டார். நான் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பி, “சார்.. செல்ஃபி” என்றதும் ‘தாராளமாக எடுக்கலாம்’ என்று சொல்லிச் சிரித்தார். அப்போதிருந்த படபடப்பில் என் கைகள் நடுங்கின. சரியாக படம் பிடிக்க முடியவில்லை. இதை கவனித்த அவர், “பொறுமையாக எடுங்கள். நான் இருக்கிறேன்” என்று சிரித்தார்.

அவருடைய சிரிப்பு, பேச்சு இதையெல்லாம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. படம் எடுத்து முடித்ததும் அவர் தனது கருப்பு நிற காரில் ஏறினார். நான் வீடியோ எடுப்பது தெரிந்ததும் டிரைவரிடம் சொல்லி கண்ணாடியை இறக்கி, எனக்கு கையசைத்துவிட்டு சென்றார். ஒரு சாதாரண ரசிகனான எனக்கு அவர் காட்டிய மரியாதை மெய்சிலிர்க்க வைத்தது. பொதுவாகவே மலேசியாவில் அவர் நடித்த படம் வெளியாகும்போது அதை திருவிழா போல கொண்டாடுவோம். ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பே இங்குதான் நடக்கிறது. கேட்கவா வேண்டும். இதை ‘ரஜினி திருவிழா’வாக கொண்டாடுவோம்” என்றார் தனபால்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x