Published : 12 Oct 2014 11:57 AM
Last Updated : 12 Oct 2014 11:57 AM

என் படங்களை சராசரி ரசிகனாகவே பார்க்கிறேன்: இயக்குநர் ஷங்கர் சிறப்புப் பேட்டி

ஐ படத்துக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகமாகிட்டே இருக்கு. இதே மாதிரிதான் நீங்கள் இதுவரை இயக்கின எல்லா படங்களுக்குமே எதிர்பார்ப்பு இருந்துருக்கு? இப்படி ஒரு எதிர்பார்ப்பை எப்படி உருவாக்கறீங்க?

ஒவ்வொரு படத்தையும் சிறப்பா கொடுக்கனும்னு நான் நினைக்கறதோட விளைவுதான் இப்படி ஆகுதுன்னு நினைக்கறேன். ஒவ்வொரு முறையுமே இதுக்கு முன்னாடி நான் பண்ண படத்தை விட சிறப்பா வரனும்னுதான் நினைப்பேன். அதனால நீங்க சொல்றா மாதிரியான எதிர்பார்ப்பு உருவாகுது. ஒரு இயக்குநரா என் படத்தை பார்ப்பதோட, ஒரு ரசிகனாவும் அதை பார்க்கறேன்.

ஒரு சராசரி ரசிகனோட பிரதிநிதினு உங்களை நீங்க நம்பிக்கையா சொல்லிக்க முடியுமா?

ஏன் முடியாது? எனக்கு கலவையான ரசனை இருக்கு. இந்துஸ்தானி இசை கேட்கற அதே விருப்பத்தோட கானா பாடலையும் கேட்க முடியுது. கிங் காங் படம் பார்க்கறா மாதிரிதான் அகிரா குரோசவா படத்தையும் பார்க்கறேன்.

சராசரி ரசிகனை திருப்திபடுத்தனும்னு முயற்சி பண்றதுனால, இன்னும் பிரம்மாண்டம் காட்டனும், வித்தியாசமான இடத்துல பாடலை படம்பிடிக்கனும்னு, சில சமயங்கள்ல பொருத்தமில்லாத விஷயங்களை திணிக்க அழுத்தம் வந்துருக்கா?

கதைல இந்த அம்சங்கள் எல்லாம் வேணும்னு நான் எப்பவுமே வேலை செய்யறதில்லை. கதைக்கு என்ன தேவையோ அதுதான். நீங்க நம்பினால் நம்புங்க, பாடலே இல்லாம ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். ஒரு நாள் அந்தப் படத்தையும் எடுப்பேன்

அப்போ பாடல்கள் இல்லாத காரணத்துலாதான் இது நாள் வரைக்கும் அந்த படம் எடுக்கப்படலையா?

இல்லை, அப்படி இல்லை. அதுல பாடல்கள் இல்லாம இருக்கலாம். ஆனா அதுக்கு ஈடுகட்ட மற்ற அம்சங்கள் இருக்கும்

ஐ இசை வெளியீட்டுல இந்த படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்னு சொன்னீங்க. முதல் முறையா இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன்னும் சொன்னீங்க. காதலன் அந்த மாதிரி ஒரு படம் தான?

படத்தை பத்தி நிறைய சொல்ல முடியாதுன்னுதான் ரொமாண்டிக் த்ரில்லர்னு சொன்னேன். காதலன் இளமையான ஒரு காதல் கதை. அதை விட ஐ ரொம்ப வித்தியாசமான படம்.

எப்பவும் ஒரு மெஸேஜ் சொல்ற படம் அடுத்து ஒரு ஜாலியான படம்னு நீங்க எடுக்கற பாணியும் இப்ப உடைச்சிருக்கீங்க போல இருக்கே?

எந்திரன் சரியான நேரத்துல எடுத்திருந்த இந்த பாணி 10 வருஷம் முன்னாடியே உடைஞ்சிருக்கும். நண்பன் படம் இயக்கினதுக்கு இப்படி ஒரு பாணில போக வேணாம்னு நினைச்சதுதான் காரணம். நண்பன், அதுவரைக்கும் நான் எடுக்காத மாதிரியான ஒரு படம். ஷங்கர் இந்த மாதிரியான படங்கள் தான் எடுப்பார்னு மக்கள் நினைக்கறதையும் தாண்டி வேற படங்களையும் இயக்க நான் ஆர்வமா இருக்கேன்னு இதுலையே நீங்க புரிஞ்சிக்கலாம்.

ஐ இசை வெளியீட்டு விழால், இந்தப் படத்துக்கு வழக்கத்துக்கு மாறா, ரஹ்மான் இதுவரைக்கும் இசையமைக்காத வகைல ஒரு இசையை எதிர்பார்த்ததா சொன்னீங்க. இந்த மாதிரியான சோதனை முயற்சி பி, சி செண்டர் ரசிகர்களை ஒழுங்கா போய் சேருமான்னு கவலைபடலையா?

எல்லாருக்குமே புதுசா ஏதோ தேவைப்படுதுன்னு நான் நினைக்கறேன். அய்லா பாடலோட காட்சியமைப்பை பார்க்கும்போது அந்தப் பாடல் உங்களுக்கு இன்னும் அதிகமா பிடிக்கும். மாடல்களை பத்தின கதைல ஒரு பாடல், அதனால 6-7 விளம்பரங்களை ஒன்றாக்கி இந்தப் பாடலோட சேர்த்திருக்கோம். இந்தப் பாடலோட பின்னணில ஒரு காதலும் இருக்கு. அந்த சூழலுக்கு சரியான பாடலாதான் வந்துருக்கு. இது சோதனை முயற்சினு நான் ஒத்துக்கறேன் ஆனா அது ஏன் எல்லாரையும் போய் சேரக் கூடாது?

உங்களுக்கான கதைகளை எங்க கிடைக்குது?

எல்லா இடங்களையும். செய்திகள்ல, புகைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் இப்படி. வித்தியாசமான ஒரு நபரை பார்க்கும்போது, உடனே அவர் எங்கேர்ந்து வந்துருப்பாரு, அவரோட கதை என்னவா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். இந்த யுக்தி, சுவாரசியமான கதைகளை எழுத உதவுது

பிரம்மாண்டமான படங்கள் இயக்க உங்களுக்கு பிடிச்சிருக்கு இல்லையா? ஐ படத்தோட பட்ஜெட் 150 கோடினு சொல்றாங்க

என்ன காரணமோ தெரியல, சிலர் என் படத்தோட பட்ஜெட்டை எப்பவுமே மிகைபடுத்தி சொல்றாங்க. ஐ படத்தோட பட்ஜெட் 100 கோடிக்கும் கம்மிதான்னு நான் சொன்னா நீங்க என்ன நம்பலாம். ஒவ்வொரு ரூபாயும் மிச்சம் பண்ணனும்னுதான் நான் முயற்சி பண்ணுவேன். படப்பிடிப்புல இருக்கும்போது, எந்த தொழில்நுட்ப சாதனத்தை திரும்பக் கொடுத்து, காசை மிச்சம் பண்ணலாம்னு கவனத்தோட தான் இருப்பேன்.

அதே மாதிரி, ஒரு படம் எடுக்க நான் எடுத்துக்கற கால அவகாசத்தையும் மிகை படுத்தறாங்க. ஐ போன தீபாவளிக்கு வெளியாக திட்டம் போட்டிருந்தோம். தயாரிப்பு தரப்புல சில காரணங்கள்னால தள்ளி போச்சு. சில மாதங்கள் நான் சும்மாதான் உட்கார்ந்துருந்தேன்.

இந்த மாதிரியான தாமதங்கள் நடிகர்களுக்கு கஷ்டமான விஷயம் இல்லையா. நடிகர் விக்ரம் சீக்கரமா வேலையை முடிக்கனும்னு நினைச்சிருப்பாரே

எந்த இயக்குநருக்குமே ஒரு படம் முடிக்க குறைஞ்சது ஒரு வருஷம் ஆகும். விக்ரமை பொருத்த வரை, ஒரு படத்துக்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்காறு. ஐ படத்துக்காக எடை குறைச்சது அவரா பண்ணதுதான். படத்துக்கு நல்லா இருக்கும்னு நினைச்சதுனால நானும் சரினு சொன்னேன். ஆனா மறுபடியும், நான் என்னோட நடிகர்கள் கிட்ட கடுமையா நடந்துக்கறேன்னு மிகை படுத்தி புரளிகளை கிளப்பினாங்க. என்கூட புகைப்படம் எடுத்துக்க விரும்பின ஒரு ரசிகர், ஏன் விக்ரமை இப்படி கொடுமை படுத்தறீங்கனு கேட்டாரு. ஆனான் நான் எதுவுமே பண்ணலை.

இப்படி கடுமையான முயற்சிகள் பண்ண ஒரு சில நடிகர்கள்தான் இருக்காங்க, இல்லையா?

ஆமாம். விக்ரம் மாதிரி ஒட்டுமொத்தமா கதாபாத்திரத்துக்காக மாற விரும்பறவங்க ஒரு சிலர்தான் இருக்காங்க. ஆனா எல்லா கதைகளுக்குமே இப்படியான தேவைகள் இல்ல. கதைக்கு தேவையான நடிகர் கிடைக்கலன்னா கதைய அதுக்கு ஏத்தா மாதிரி மாத்துவேன். ஆனா நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டா அடுத்த கதைய தேடி போய்டுவேன். படம் எடுக்கறதுல பல வகைல சமரசங்கள் இருக்கு.

ரஜினிகாந்த் இல்லாம முதல்வன் எடுத்தா மாதிரியா?

முதல்வன் படத்துல கமல்ஹாசன் நடிக்கனும்னு கூடதான் நான் நினைச்சேன். ஆனா அவர் அந்த சமயத்துல ஹே ராம் படத்துல பிஸியா இருந்தாரு. படத்தோட ஒரு வரிக் கதைய அவர்கிட்ட சொல்ல நேரம் கிடைக்கும்போது அர்ஜுனை வெச்சு நான் படத்தை எடுத்து முடிச்சிட்டேன்.

கதைக்கான ஹீரோவை தேடுவீங்களா, ஹீரோவுக்கான கதைகளை எழுதறீங்களா?

ரெண்டுமே. சில கதைகள்ல பெரிய ஹீரோக்கள் இருந்தா மட்டும்தான் நல்லா இருக்க்ம். சிவாஜி படத்துல ரஜினிகாந்துக்கு பதிலா வேற யாரையும் நடிக்க வெச்சிருக்க முடியாது. அதே மாதிரி, எந்திரன் படத்தை வேற நடிகரை வெச்சு கூட எடுத்திருக்கலாம். ஒரு படம் எடுக்கும்போது எதிர்பாராம எது வேணாலும் நடக்கும். எது சரியா இருக்கும்னு யாருக்குமே தெரியாது

உங்களுக்கும் தெரியாது?

(சிரிக்கிறார்) எனக்கும் தெரியாது. ஒரு படத்தோட வெற்றி தோல்வியை கணிக்க முடியும்னா இயக்கத்தை விட்டு, அந்த திறைமைய வெச்சு பணம் சம்பாதிக்க மாட்டனா.

லோ பட்ஜெட் படங்கள் எடுக்கற ஷங்கரை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா? எளிமையான கதை, கதாபாத்திரங்களோட?

ஒரு முறை மறைந்த எழுத்தாளர் சுஜாதா கிட்ட இதை பத்தி பேசினேன். அவர்கிட்ட இந்த கேள்விய கேட்டப்போ, வேணாம்னு உடனடியா சொன்னாரு. அந்த மாதிரியான படங்கள் எடுக்க பல இயக்குநர்கள் இருக்காங்க. ஆனா எனக்கு மட்டும்தான் பெரிய பட்ஜெட் படங்கள் இயக்க வாய்ப்புகள் வருது. அதனால அப்படி சொன்னாரு. இந்த மாதிரி படங்கள் எனக்கு இன்னும் போர் அடிக்கலை. அப்படி அடிக்கும்போது கண்டிப்பா லோ பட்ஜெட் படங்கள் எடுப்பேன். ஏன்னா முதன் முதலா நான் எடுக்க நினைச்ச படம், ரேவதியை நாயகியா வெச்சு, கிராமத்து பின்னணில பெண்ணை மையப்படுத்தி ஒரு கதைதான்.

நீங்க சொல்றது சுவாரசியமா இருக்கு ஏன்னா உங்க சில படங்கள்ல பெண்க்களுக்கான பாத்திர படைப்பு ரொம்ப பலவீனமாதான் இருந்துருக்கு (இந்தியன், முதல்வன், அந்நியன்)

அந்தப் படங்கள் எல்லாமெ ஹீரோவை மையமா வெச்சு எடுத்த படங்கள். நான் ஸ்கிரிப்டோடதான் பயணிக்கறேன். ஹீரோவை அடுத்த நிலைக்கு எடுத்துட்டு போறா மாதிரியான பெண்களைதான் கதைக்குள்ள எடுத்துட்டு வரேன். அவங்களுக்கு தேவையில்லாத முக்கியத்துவத்தை கொடுத்ததில்லை. காதலன், ஜீன்ஸ் படங்கள்ல பலமான பெண் பாத்திரங்கள் இருந்திருக்கு. ஐ படத்தை பொருத்த வரை ஏமி ஜாக்ஸனோட பாத்திரம் ரொம்ப முக்கியமானது. கதாநாயகிய மையப்படுத்தி எழுதின கதை நிறைய தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கலைன்னுதான் அந்த கோபத்தோட எதிர்மறையான ஒரு ஹீரோ பாத்திரத்தை வெச்சு ஜெண்டில்மேன் கதைய எழுதினேன்.

நடுவுல சில மாதங்கள் சும்மா இருந்ததா சொன்னீங்களே, அப்போ வேற கதைகள் எதையாவது எழுதி முடிச்சீங்களா?

மூணு முடிச்சிருக்கேன். ஆனா அதுல அடுத்து எதை ஆரம்பிப்பேன்னு தெரியலை.

எந்திரனோட இரண்டாம் பாகம்?

ரஜினிகாந்த் நடிப்புல எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்கனும்னு எனக்கும் ஆசை இருக்கு. ஆனா அது என்னோட அடுத்த படமா இருக்குமா இல்லை அப்படி ஒரு படம் எடுப்பனான்னு எனக்கு தெரியலை. இப்போதைக்கு ஐ படத்தோட வெளியீடை பத்தி என் தயாரிப்பாளர் என்ன சொல்லுவார்னு கேட்க காத்துகிட்டு இருக்கேன்

© தி இந்து ஆங்கிலம்

தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x