Published : 05 Jul 2016 03:00 PM
Last Updated : 05 Jul 2016 03:00 PM
சில காலத்திற்கு போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி முடிவு செய்திருக்கிறார்.
தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குநர் சமுத்திரக்கனி. அவருடைய உடலமைப்பு போலீஸ் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவும் இருந்ததால் பல இயக்குநர்களின் முதல் தேர்வாக சமுத்திரக்கனி இருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த படம் 'விசாரணை'. இப்பாத்திரத்துக்காக சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தின் இறுதிகாட்சிகளுக்காக சதுப்பு நிலத்தில் காட்சிப்படுத்தினார்கள். அதில் பாம்புகள் எல்லாம் சுற்றுக் கொண்டிருக்குமாம். அதனிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்போதும் 'விசாரணை' படத்தின் பாதிப்பில் இருந்து சமுத்திரக்கனி இன்னும் வெளியே வரவில்லையாம்.
அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள், போலீஸ் கதாபாத்திரத்துக்காக சமுத்திரக்கனியை அணுகி இருக்கிறார்கள். ஆனால், "தொடர்ச்சியாக ஒரே மாதிரி போலீஸ் கதாபாத்திரமாக இருக்கிறது. 'விசாரணை' கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் நடித்தேன். இன்னும் கொஞ்சம் காலத்துக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி. இதுவரை சுமார் 15 படங்களுக்கு மேல் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.
'அப்பா' வெளியானதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சமுத்திரக்கனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT