Published : 04 Feb 2017 02:47 PM
Last Updated : 04 Feb 2017 02:47 PM

நந்தினிக்கு நீதி கேட்கும் கமல்: நெட்டிசன்கள் வரவேற்பு

தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், இதே கோரிக்கைக்காக ஹேஷ்டேக் இணைத்து இணையத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), கடந்த ஜனவரி 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு கீழமாளிகையைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(26) , அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜன.15-ம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத் தினர் அரியலூரில் ஜன.28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.

இதனிடையே நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேகுடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நெட்டிசன்களால் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு வருகிறது.

இதே ஹேஷ்டேகில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், "நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை. குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல" என்று கூறியுள்ளார்.

இவரது பதிவை வரவேற்கும் விதமாக ட்வீட்டாளர்கள் பலரும் கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணகான பதில் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில:

* Balamurugan ‏@ibalamurugan72: நிதியாளும் உலகில் நீதி கிடைக்குமா தலைவா? சாதிக்குத் தலைவணங்கும் பேய்கள் இருக்கும்வரை இது குறையாது. சாட்டையை நீங்களாவது எடுத்தீர்களே!

* ஆம்லெட் ‏@teakkadai: உங்களின் குரல் மிக அவசியமான ஒன்று. உங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்று நீதி கிடைக்கட்டும்.

* thayaprabhu ‏@thayaprabhu: சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் கலைஞன் தன் கருத்தை வெளிபடுத்துவதே கலைக்கு செய்யும் நேர்மையாகும்.

* Govindan ‏@sgsgovi: அரியலூரில் அலறுகிற சத்தம் அரசுக்கு கேட்க வேண்டும்.

* Md'yasin ‏@md_mdyasin: இதுவே நான் கூறினால் வசைபாடுவார்கள், என் குரலாக நீ ஒலித்ததால். நன்றி.

* Duraipandi ‏@Duraipa67402474: வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போன்ற வார்த்தைகள்!

இரா.மகாராஜா ‏@Karisalrajaa: மிக்க நன்றி. நீங்கள் காணொளியிலும் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் உங்களது குரலின் வலிமை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்கும்.

Amarnath Pitchaimani ‏@Amarnat35704474: வலிமையற்றவர்களுக்காக வலிமையானவர்களின் குரல் தேவை.

நடிகர் கமல்ஹாசனின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சினிமா ஆர்வலர் 'தமிழ் ஸ்டூடியோ' அருண் குறிப்பிடும்போது, "கமல் நேர்த்தியாக பேசுகிறார். கருத்துகளை தெரிவிக்கிறார். சமூகத்தை உற்றுப் பார்க்கிறார். கமல் செய்வது அசாதாரண விஷயமல்ல. அது சமூகத்தில் உள்ள கலைஞர்களின் கடமை. சமுகத்தில் பங்காக இருப்பவர்களின் கடமையும் கூட" என்று கூறியுள்ளார்.

சினிமா ஆர்வலர் கருந்தேள் ராஜேஷ் குறிப்பிடும்போது, "கமல்ஹாசனை மனதாரப் பாராட்டுகிறேன். அவரது சோஷியல் மீடியா பிரசன்ஸ் சமீப காலமாக பிரமாதம். அவரது ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே பாராட்டத்தக்கவை. ஒரு சமூகப் பொறுப்புள்ள பிரபலம் என்பதற்குக் கமலின் இத்தகைய நிலைத்தகவல்களே உதாரணம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x