Last Updated : 22 May, 2017 03:46 PM

 

Published : 22 May 2017 03:46 PM
Last Updated : 22 May 2017 03:46 PM

தலைவர் பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் படம் பண்ண விரும்பவில்லை: விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் படம் பண்ண விரும்பவில்லை என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஷால் தெரிவித்தார்.

திருட்டு விசிடி, க்யூப் பிரச்சினை, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:

"நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள்.

தணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரிச் சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். மேலும், செல்வமணி சாரும் எங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். அதற்கு நன்றி.

க்யூப் பிரச்சினை

க்யூப் நிறுவனம் ஒரு படத்துக்கு 20 ஆயிரம் நிர்ணயம் செய்து முறையாக சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 20 ஆயிரம் வாங்குகிறார்கள். இதற்கு ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் 5 ஆயிரத்துக்குச் செய்து தருகிறோம் என்கிறார்கள். அதுவும் ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் தான். 2K, 4K, Barco, Sony போன்ற எந்தவொரு format என்றாலும் 5 ஆயிரம் தான் என்கிறார்கள். வாரத்துக்கு பணம் கட்டும் முறையில் 2500 தான் என்றார்கள். அதன்படி பார்த்தால் திரையரங்கில் ஒரு காட்சிக்கு 150 ரூபாய் தான் ஆகும்.

ஆகஸ்ட் மாதத்துக்குள் 5 ஆயிரம் கட்டணத்துக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிறைய பணம் மிச்சமாகும். சிறு தயாரிப்பாளர்களுக்கு இதில் பாதி தான், 2500 ரூபாய் மட்டுமே.

க்யூப் நிறுவனத்தை அழைத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என சொல்கிறார்கள் என பேசினோம். அப்போது நாங்கள் சரியான பணத்துக்குத் தான் செய்து கொடுக்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் 5 தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம் என்றார்கள். அப்போது பிரகாஷ்ராஜ் சார் “என்ன லஞ்சம் கொடுக்கிறாயா?” எனக் கேட்டார். அப்போது போனவர்கள் தான் பிறகு வரவே இல்லை. இப்பிரச்சினையை நான் கையில் எடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

கேபிள் தொலைக்காட்சி

பாபா கேபிள் விஷனில் ஒரு மாதத்துக்கு 20 லட்ச ரூபாய் என ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய உழைப்பை போட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசிய போது, எங்களிடம் பட உரிமை இருக்கிறது என்றார்கள். அவரிடம் உங்களுக்கு யார் படம் போடுவதற்கு உரிமை கொடுத்தது எனக் கேட்டால் பதில் இல்லை . அவர்களை வெளியே அனுப்பிவிட்டோம். அடுத்து வந்தவர் 60 லட்ச ரூபாய் தருகிறேன் என்றார். அவருக்கும் முடியாது என கூறிவிட்டோம். தற்போது ஒன்றரை கோடி வரை கேட்கிறார்கள். அந்த ஒன்றரை கோடியே குறைவு என்று ஞானவேல்ராஜா பேசி அதற்கான பணிகளை செய்து வருகிறார். வெறும் பாடல்கள், காட்சிகள் மட்டும் போடுவதற்கு ஒன்றரை கோடி தருகிறேன் என சொல்கிறார்கள்.

1100 கேபிள் தொலைக்காட்சிக்கு ஒரு முறை போடுவதற்கு ஒரு சிறு திரைப்படம் திரையிடக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு 42 லட்சம் வரை தருகிறோம் என்கிறார்கள். இன்னும் தொலைக்காட்சி உரிமம், பாடல் உரிமம் உள்ளிட்ட எதுவுமே விற்காமல் 42 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது எத்தனை தயாரிப்பாளருக்கு தெரியும்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு அணிகளாக இருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. அனைவருமே ஒரே அணி தான். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் மட்டுமே திரையுலகம் ஜெயிக்கும். கேபிள் தொலைக்காட்சி தொடர்பாக 32 மாவட்டங்களில் அலுவலகம் போடுகிறோம். அதன் மூலமாக ஒன்றரை கோடி பணம் சம்பாதித்து அது சிறு தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். அதற்கு 2 மாதங்கள் நேரம் வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு என தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமா என்ற எண்ணமுள்ளது. திருட்டு விசிடிக்கு என தனியாக 20 பேர் கொண்ட குழு அமைக்கவுள்ளோம்.இன்சூரன்ஸ் தொடர்பான முறைகேட்டை ஆராய்ந்து வருகிறோம்.

இணையத்தில் டிக்கெட் முன்பதிவு

ஜி.எஸ்.டி வரி வந்தவுடன் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தனது படத்தின் வியாபாரம் என்னவாகிறது என்பது தெரிந்துவிடும். இனிமேல் தவறாக போய் பணம் திரும்ப வேண்டும் என கேட்க முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒவ்வொரு படத்தின் வசூல் என்ன என்பது தெரியவரும். மல்டிப்ளக்ஸ் மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது வைக்க வேண்டும். எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியவரும்.

ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 120 ரூபாய், ஜி.எஸ்.டி வந்தவுடன் 153 ரூபாய் வரும், இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் அவர்கள் 30 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு வாங்குகிறார்கள். ஒரு ரசிகர் படம் பார்ப்பதற்கு அவர்களுக்கு பணம் போகிறது. அப்பணம் தயாரிப்பாளருக்கு வருவதில்லை. ஆகவே தயாரிப்பாளர் சங்கமே தனியாக இணையம் தொடங்கும். நமது படத்தை திரையரங்கில் போடுவதற்கு வேறு ஒருத்தர் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தயாரிப்பாளர் சங்கத்தின் இணையத்தில் அது 10 ரூபாயாக இருக்கும். அதில் 2 ரூபாய் தயாரிப்பாளர் நன்மைக்கு கொடுக்கப்படும்.

எங்களுக்கு க்யூப், கேபிள் உள்ளிட்ட எதிலிருந்தும் கமிஷனே வேண்டாம். இந்த பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் படம் பண்ண (தயாரிக்க) விரும்பவில்லை. எங்களுடைய அழைப்பை ஏற்று சில திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நன்றியும், மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பட வெளியீட்டு சிக்கல்

ஒரு படத்தின் தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே, எப்போது வெளியிடலாம் என்று முடிவு செய்கிறீர்களோ அதை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவியுங்கள். அதற்கான ஒரு மொபைல் ஆப் தயாராகி வருகிறது. இணையம், மொபைல் ஆப் ஆகியவை தயாரானவுடன் இனிமேல் படத்தலைப்பு பிரச்சனைகள் அனைத்தையுமே ஒரே க்ளிக்கில் முடித்துவிடலாம். படத்தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் பிரச்சினையும் பதிவு செய்தீர்கள் என்றால் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தொலைக்காட்சி, திரையரங்கம், இசை உள்ளிட்ட எந்தவொரு உரிமையும் விற்றீர்கள் என்றால் அதையும் இணையத்தில் தெரிவியுங்கள். ஏனென்றால் நாங்கள் செய்யும் வியாபாரம் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்வது எனக்கு தெரியும். ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து 1 மாதமாகிவிட்டது. இன்னும் 23 மாதங்கள் இருக்கிறது. நவம்பருக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்.

கோஷம் போட இடமில்லை

தயாரிப்பாளர்கள் மட்டுமே உங்கள் படத்துக்கு ராஜா. தயவு செய்து அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள். உங்களுக்கான சரியான தொகை கிடைக்க வேண்டும் என்று தான் உழைத்து வருகிறோம். நம்முடைய படத்தை தவறாக உபயோகித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் பணம் அவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும், வேறு யாரும் ஆட்டையப் போடக் கூடாது. பஞ்சாயத்து என்பதற்கே இங்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.

பழைய சங்கம் போல இங்கு கோஷம் போட எல்லாம் முடியாது. இந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். ஏனென்றால் செல்வமணி சார் வந்து பேசி முடிவு செய்தார். அனைவரும் சங்கத்துக்கு வாருங்கள், நல்லது மட்டுமே செய்ய காத்திருக்கிறோம்" என்று பேசினார் விஷால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x