Last Updated : 17 Jan, 2014 01:12 PM

 

Published : 17 Jan 2014 01:12 PM
Last Updated : 17 Jan 2014 01:12 PM

வெற்றி மட்டுமே போதாது! : விமலின் கனவுகள்

நல்ல மனிதனாக இருக்கப் பழகு. அந்த குணம் ஒரு நல்ல கலைஞனாக ஆக்கிவிடும்!’ கூத்துப்பட்டறையில் பயின்ற நாட்களில் முத்துசாமி சார் அடிக்கொரு தரம் இப்படிச் சொல்வார். எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தை அது. பள்ளிக்கூட படிப்போடு ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓடி வந்தவன், நான். இங்கே வந்துதான் நிறைய படித்தேன். பாட புத்தகத்தை அல்ல. நடிப்பை. இன்னமும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டே இருக்கிறேன்!’’ - 2014 ம் ஆண்டின், ஆக்டிங் கிராஃப் பட்டியலில் எகிறி நிற்கும் நாயகர்களில் விமல் குறிப்பிடத்தக்க ஒருவர். ‘புலிவால்’, ‘அஞ்சல’, ’மஞ்சப் பை’ கண்ணன் இயக்கவிருக்கும் ‘சக்கரை’, சற்குணத்தோடு ஒரு புதியபடம், அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய 25-வது படம் என்று விமலின் புத்தாண்டு டைரியும் கால்ஷீட்டால் நிரம்பி வழிகிறது. சமீபத்தில் பிறந்த தன் இரண்டாவது மகனின் பிஞ்சு விரல்களுக்கு முத்தமிட்டவாறே தன் திரை அனுபவங்களை தொடர்ந்து பேசினார்.

இத்தனை படங்களுக்குப் பின்னும் கூத்துப்பட்டறை நினைவுகள் இருக்கத்தானே செய்கிறது?

எப்படி இல்லாமல் இருக்க முடியும்? என்னை 6 ஆண்டுகள் கூர்தீட்டிக்கொள்ள களம் அமைத்துத் தந்த பள்ளிக்கூடமல்லவா அது! தரையைக் கூட்டுவதில் தொடங்கி சமையலறையில் தேநீர் போட்டு அனைவருக்கும் கொடுப்பது வரைக்கும் இன்று சினிமாவில் என் உடல்மொழிக்கு அடிப்படை அமைத்துக்கொடுத்த இடம். நான், விஜய்சேதுபதி, விதார்த், ஆடுகளம் முருகதாஸ் என்று நட்பு பட்டாளங்கள் கூடி கும்மாளம் அடித்த இடம். அங்கிருந்துதான் என் தொடக்கமும் என்பதை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.

இதெல்லாம் ஓ.கே. நகரத்து இளைஞன் கதாபாத்திரத்திலும் மிடுக்காகவே இருக்கிறீர்கள்? ஆனால் நீங்கள் தேர்வு செய்த நகரத்துக் கதைகள் சறுக்குகிறதே?

இதுவரைக்கும் இருந்த கேரியரில் இருந்து இனி என் ரூட்டில் நிறைய புதுமைகள் இருக்கும். சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள்தான் ஆகிறது. தொடக்கத்தில் கிடைத்த வெற்றியோடு சேர்ந்து அடுத்தடுத்த கதைகளும் வந்து குவிந்தன. அப்போ இருந்த புரிதல் வேறு. எனக்கு ஷூட் ஆகாத மீசை, தாடி இல்லாத கேரக்டர்களும் செய்யத்தான் நேர்ந்தது. நாம பண்ணும் கேரக்டர் மக்களுக்கு பிடித்தால்தான் இங்கே ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஒரு கட்டத்தை தாண்டியபின்தான் ‘கலகலப்பு’, ‘தேசிங்குராஜா’, ‘கேடி பில்லா கில்லாடி ரெங்கா’ படங்கள் மாதிரியான களம்தான் நமக்கு விளையாட சரியான களம் என்று பட்டது. அடுத்தடுத்து வரும் புலிவால், அஞ்சல, மஞ்சப் பை உள்ளிட்ட படங்களின் கலவை நடிப்புக்கு சவாலானதாக அமையும். இந்தப்படங்களில் என்னை இன்னும் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

உங்களின் முதல் சாய்ஸ் கதையா? இயக்குநரா?

அதுதான் என் தேடல். சில நேரத்தில் ஏன் இந்த படத்தில் நடித்தீர்கள் என்கிற விமர்சனம் வருகிறது. அதை வைத்துப்பார்க்கும்போது கேடி பில்லா, தேசிங்கு ராஜா மாதிரியான கதைகளை தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. ஒவ்வொரு படங்களாக நடித்து நடித்துதான் இதை கற்றுக்கொள்ள முடிகிறது. வெற்றியை விட தோல்விகள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வைக்குதே. சில தோல்விகளும் தேவை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்த தோல்விகள் கௌரவமான தோல்விகளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனது தோல்விப்படங்கள் கூட தயாரிப்பாளர்களை கண்ணீர் சிந்த வைத்ததில்லை. 2014 ஆம் ஆண்டின் தேர்வுகள் மிகச் சரியாக அமையும்.

ரொமான்ஸ் காட்சிகளில் உங்களிடம் காதல் பொங்கி வழிகிறதே?

எல்லாரும்தான் ரொமான்ஸ் காட்சிகளில் கலக்குறாங்க. காதல், சென்டிமென்ட், ஆக் ஷன் எதுவாக இருந்தாலும் கோ - ஆர்டிஸ்ட் சரியாக அமைந்துவிட்டால் அந்தக் காட்சி ஹிட்தான். கதையை உள்வாங்கிகொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்தும்போது கோ - ஆக்டர் நமக்கு கொடுக்கும் ஊக்கம் ரொம்பவே முக்கியம். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவனாக இருக்கலாம். அவ்ளோதான்.

சூரிக்கும் உங்களுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருக்கே?

நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த நாட்களில் இருந்தே கூடித்திரிந்த நண்பர்கள் என்றால் அப்படித்தானே. எங்கள் இருவருடைய மனைவிகளும் எங்களைத் தாண்டிய நெருக்கமான தோழிகள். இப்படியான பந்தம்தான் சூரி நடிப்பைத் தாண்டியும் என்மேல் அக்கறை எடுத்துக்கொள்ள காரணம். இப்பவும் விழா மேடைகளில் ஒரு 10 நிமிடம் நின்று பேச முடியாத பையனாகத்தான் பதைபதைக்கிறேன். சூரிதான் என்னை ஒவ்வொரு முறையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்காகவே அடுத்த மேடையில் பின்னி எடுத்தாக வேண்டும் என்று இருக்கிறேன்.

குறும்படங்களில் எல்லாம் உதவி இயக்குநராக இருந்தவர்? அடுத்து இயக்கும் திட்டம் ஏதாவது?

ஆக்டிங் கேரியர் அழகாக நகர்கிறது. அதில்தான் என் கவனம் முழுவதும் விரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x