Last Updated : 21 Oct, 2014 01:21 PM

 

Published : 21 Oct 2014 01:21 PM
Last Updated : 21 Oct 2014 01:21 PM

தமிழக காவல் துறை பாதுகாப்புடன் கத்தி ரிலீஸ் உறுதி

தமிழக காவல் துறையின் பாதுகாப்புடன் 'கத்தி' திரைப்படம் திட்டமிட்டப்படி புதன்கிழமை வெளியாகிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர்.

'கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டன. இது தொடர்பாக சென்னை காவல்துறை 5 பேரை கைது செய்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதம்

சென்னையில் 'கத்தி' வெளியாகும் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கப்படாமல் இருந்தது. இன்று காலை சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் "நாளை திட்டமிட்டப்படி 'கத்தி' திரைப்படம் வெளியாகும். தமிழக அரசு தியேட்டர்களுக்கு நல்லமுறையில் பாதுகாப்பு அளிக்கிறது. நாங்கள் கேட்காமலே தற்போது பாதுகாப்பு அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

விஜய் அறிக்கை

'கத்தி' படத்திற்கு தொடர்ச்சையாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அமைதியாக இருந்த விஜய் தரப்பில் இருந்து இன்று காலை அறிக்கை ஒன்று வெளியானது.

அதில் விஜய், "சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுக்கோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர். எனவே, இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது.

எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும், 'கத்தி' திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

'கத்தி' திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களூக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டு இருந்தார்.

'கத்தி' எதிர்ப்பாளர்கள் கூட்டம்

இதனிடையே, 'கத்தி' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் விரைவில் கூட்டம் நடைபெறவுள்ளது.

லைக்கா பெயரை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்து இருப்பதால் தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவு வந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x