Last Updated : 14 Oct, 2013 11:02 AM

 

Published : 14 Oct 2013 11:02 AM
Last Updated : 14 Oct 2013 11:02 AM

ஆரம்பம் வெளியிடத் தடை கோரி வழக்கு!

'ஆரம்பம்' படத்தினை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிகவும் கடன்பட்டு இருந்ததால், அஜித் தானாக முன்வந்து அவருக்கு கால்ஷீட் கொடுத்தார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஏ.எம்.ரத்னம் உடனடியாக வேலையைத் தொடங்க, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பமானது 'ஆரம்பம்’.

படம் முடிவடைந்து தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், “எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.

இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.

தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள 'ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் 'ஆரம்பம்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று அம்மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

“'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர் நானில்லை, ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் ரகுராம் தான்” என்று தெரிவித்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x