Published : 26 Oct 2014 03:48 PM
Last Updated : 26 Oct 2014 03:48 PM
இலங்கையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனராக இருக்கும் தீபக் சண்முகநாதனை நடிகை பூஜா கரம் பிடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருக்கிறது.
சரண் இயக்கிய 'ஜே.ஜே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதனைத் தொடர்ந்து 'அட்டகாசம்', 'உள்ளம் கேட்குமே', 'பட்டியல்', 'ஓரம்போ' என பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்' படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்த பூஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இவரது நடிப்பைப் பார்த்து ரஜினிகாந்த் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பூஜாவிற்கு திருமணம் என்று இருமுறை செய்திகள் வெளிவந்தன. இதற்கு பூஜா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், தற்போது இலங்கையில் மாடலாகவும், ஃபேஷன் டிசைனராகவும் உள்ள தீபக் சண்முகநாதனை காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
பொது நிகழ்ச்சியில் ஒன்றில் இருவரும் சந்தித்து நண்பர்களாக வலம் வந்திருக்கிறார்கள். தீபக்கின் பிறந்த நாளான அக்டோபர் 17-ம் தேதி, பூஜாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். தீபக்கின் காதலை ஏற்றுக் கொண்ட பூஜா, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்.
இதனை உறுதி செய்யும் விதமாக, தீபக் சண்முகநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பூஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT