Last Updated : 15 Jun, 2017 11:52 AM

 

Published : 15 Jun 2017 11:52 AM
Last Updated : 15 Jun 2017 11:52 AM

க்யூப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? - ஞானவேல்ராஜா பதில்

தமிழ் திரையுலகில் நிலவி வரும் க்யூப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா பதிலளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் க்யூப் பிரச்சினையை முடிவுக் கொண்டுவர தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் பேசிய விஷால், "க்யூப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். புதிதாக வந்திருக்கும் ஒருவர் 22,500 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாய்க்கு தருகிறேன் என கூறியுள்ளார்" என்று பேசினார்.

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உள்ளது. அதில் இப்பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஆடியோ வடிவில் பதிலளித்துப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல்ராஜா.

அந்த ஆடியோ பதிவில் அவர் பேசியதாவது:

"அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 22,500 வாங்கக்கூடிய இடத்தில் 5000 ரூபாயும் மற்றும் சிறுபடங்களுக்கு 22,500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய்க்கும் அளிக்க ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடைய ஆதரவின்றி இதனை செயல்படுத்த முடியாது. பெரிய படங்களின் தயாரிப்பாளரால் 22,500 ரூபாயை கட்டிவிட முடியும். இந்த முடிவால் சிறுமுதலீட்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பயனாக இருக்கும். அவர்களுடைய மொத்த பாரமும் கீழே இறக்கி வைத்துவிடக்கூடிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழலை ஏற்படுத்துவதற்கு பெரிய படங்கள் மற்றும் சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு, அதற்கு மேல் இனிமேல் 23,500 ரூபாய் கட்ட மாட்டோம். 5000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் மட்டுமே கட்டுவோம் என்ற முடிவை எடுக்க வேண்டும். அதை மீறும் தயாரிப்பாளர்கள், ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகமாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். அப்படி யாராவது முறியடிக்க வேண்டும் என நினைத்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என முடிவு எடுத்தோம் என்றால் இந்த க்யூப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும். அந்தக் காலம் வருவதற்கு நாட்கள் அதிகமாக இல்லை.

அனைத்து தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக இருந்து முடிவு எடுக்கும்போது, 50% திரையரங்க உரிமையாளர்கள் நாம் கஷ்டப்படுகிறோம் உதவியாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதர திரையரங்கு உரிமையாளர்களுடைய போக்கு வேறுமாதிரியுள்ளது. அப்படி ஒரு சூழல் இருக்கும் போது, இப்பிரச்சினையைச் சொல்லி புரியவைக்க வேண்டும். அவர்களும் நமது முடிவுக்கு கட்டுப்படுவது போல, சங்கத்தோடு பேசி அனைத்து தயாரிப்பாளர்களும் உழைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய ஆதரவும், முழு ஒத்துழைப்பும் இந்த க்யூப் விஷயத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதை செயல்படுத்தி வருகிறோம்" என்று பேசியுள்ளார் ஞானவேல்ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x