Published : 27 Sep 2018 04:39 PM
Last Updated : 27 Sep 2018 04:39 PM

சன் பிக்சர்ஸுக்கு கைகொடுக்குமா ‘சர்கார்’?

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், சன் பிக்சர்ஸுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2008-ம் ஆண்டு கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட நிறுவனம் சன் பிக்சர்ஸ். நகுல், சுனைனா நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் விநியோகத்தைத் தொடங்கிய சன் பிக்சர்ஸ், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி தியேட்டர்களை வளைத்துப்போட்டு, பெரும்பாலான பெரிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்தது.

திமுக ஆட்சியில் இருந்த 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை ஏகப்பட்டப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்தது ‘சன் பிக்சர்ஸ்’. ஆனால், ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும்தான் சொந்தமாகத் தயாரித்தது.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சன் பிக்சர்ஸ் அமைதியானது. வருடத்துக்கு ஒரு படத்தைக்கூட வாங்கி, வெளியிடவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மறுபடியும் சன் பிக்சர்ஸ் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது.

விஜய் நடிப்பில் ‘சர்கார்’, ரஜினி நடிப்பில் ‘பேட்ட’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். அத்துடன், அடுத்த வருடம் (2019) முதல், மாதத்துக்கு ஒரு படத்தை வாங்கி வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் 3 படங்களில், முதலில் வெளியாக இருப்பது ‘சர்கார்’. வருகிற தீபாவளி விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. சன் பிக்சர்ஸைப் பொறுத்தவரை, இது கிட்டத்தட்ட ரீஎன்ட்ரி மாதிரி. பழைய மாதிரி அசுர பலத்துடன் களமிறங்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. எனவே, சன் பிக்சர்ஸுக்கு கைகொடுக்குமா‘சர்கார்’? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்தில், விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x