Published : 06 Sep 2018 07:09 PM
Last Updated : 06 Sep 2018 07:09 PM

விஜய் சேதுபதி திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது: இயக்குநர் அஜய் ஞானமுத்து

விஜய் சேதுபதி திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் நடித்துள்ள இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய அஜய் ஞானமுத்து, “நானும் அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இந்தப் படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ‘ருத்ரா’ கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசும்போது, பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா? என்ற பேச்சு எழுந்தது.

ஆனால், அவர்கள் சாயல் படத்தில் வந்துவிடுமே என்று பயந்தேன். அதனால்தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போதுதான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு டப்பிங் பேசவைக்க மகிழ் திருமேனி சாரைக் கேட்டோம். 12 நாட்கள் மிகவும் பொறுமையாக டப்பிங் பேசிக் கொடுத்தார்.

நயன்தாரா, ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எனக்குப் பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். கதை எழுதும்போதே விஜய் சேதுபதி சார் தான் நடிக்கணும் என விரும்பினேன். அவர் திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது. ‘நாளைய இயக்குநர்’ நாட்களில் அபிராமி ராமனாதன் சார் என் குறும்படத்தைப் பாராட்டி, சினிமாவில் சீக்கிரமாகப் படம் இயக்கச் சொன்னார். இன்று அவர் இந்தப் படத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x