Published : 10 Sep 2018 03:11 PM
Last Updated : 10 Sep 2018 03:11 PM

“என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம்”: விதார்த்

‘என்னை ஒரு கூண்டில் அடைத்துவிட வேண்டாம்’ என நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.

விதார்த், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வண்டி’. ராஜேஷ் பாலா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சூரஜ் இசையமைத்துள்ளார். ஹஷீர் தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. ஜீ.வி.பிரகாஷ் கலந்துகொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விதார்த், “பத்திரிகையாளர்கள் பாராட்டில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ 3-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. ‘வீரம்’ படத்தின்போது எனக்கு 'வண்டி' படத்தின் கதையைச் சொல்ல வந்தார்கள்.

4 கேமரா வைத்தெல்லாம் இந்தப் படத்தை எடுத்தார்கள். இயக்குநர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பயம். ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும்போது, இயக்குநர் ராதாமோகன் என் நடிப்பைப் பாராட்டினார். அதற்குக் காரணம், இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த பயிற்சிதான். இந்தப் படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.

இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தன. அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர்தான் இதை சுமுகமாக முடித்து வைத்தார். ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் படத்தை சரவணன் ரிலீஸ் செய்ய முன்வந்தது பெரிய விஷயம். அதுதான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.

இந்தப் படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால், அது படத்தில் இல்லை. அந்தப் பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து ஒரு கேங்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன். எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x