Published : 19 Sep 2018 03:36 PM
Last Updated : 19 Sep 2018 03:36 PM
‘துப்பாக்கி முனை’ படத்துக்காக 45 வயது தோற்றத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு.
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், பிர்லா போஸ் என்ற என்கவுன்ட்டர் போலீஸாக நடித்துள்ளார். நரைத்த தலைமுடியுடன், 45 வயது தோற்றத்திலும் இந்தப் படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் கிளைமாக்ஸில், முக்கியமான சமூகப் பிரச்சினை பேசப்பட்டுள்ளது.
‘சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. ஆனால், நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு, வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று, அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசத்தந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர, சமுதாயத்திற்காக சந்தன மரமாகத் தேய்ந்து தேய்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீஸாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை’ என்பதுதான் விக்ரம் பிரபு கதாபாத்திரத்தின் கருத்து.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகள், மும்பை, மதுரை, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தி, 40 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT