Last Updated : 30 Sep, 2014 08:23 AM

 

Published : 30 Sep 2014 08:23 AM
Last Updated : 30 Sep 2014 08:23 AM

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு இன்று விசாரணை: தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் மனு தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சிறையில் இருந்து ஜாமீனில் கொண்டு வருவதற்காக அவரது வழக்கறிஞர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஜெயலலிதாவுக்காக இன்று ஆஜரா வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நால் வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர்.

சட்ட நிபுணர்கள் குழு தீவிரம்

நீதிபதி டி'குன்ஹாவின் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு இந்திய அளவில் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிக்க சட்ட நிபுணர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள் ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 1,232 பக்க தீர்ப்பை இக்குழுவினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

ஜாமீன் கிடைக்குமா?

இந்நிலையில் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கோரும் மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். கர்நாடகத்தில் தசரா விடுமுறையையொட்டி நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டதால் மிகவும் சிரமப்பட்டு மனு தாக்கல் செய்த‌னர்.ஆனால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து கருத்துக் கூற ம‌றுத்துவிட்டனர்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தபோது, ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அசோகன், பரணி குமார் ஆகியோர் வந்தனர். கர்நாட க‌த்தை சேர்ந்த வழக்கறிஞ‌ர்கள் மட்டுமே மனுவில் கையெழுத் திட முடியும் என்பதால், பெங்களூ ரைச் சேர்ந்த 4 வழக்கறி ஞர்கள் அழைத்து வரப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் வேணுகோபால், சசிகலாவுக்கு நிவாஸ், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், இளவரசிக்கு அம்ஜத் பாஷா ஆகியோர் கையெழுத்திட்டு சரியாக 12.10 மணிக்கு ஜாமீன் மனு பதிவு செய்யப்பட்டது.

தீர்ப்புக்கு இடைக்கால தடை?

இதனைத் தொடர்ந்து நால்வரும் நான்கு முக்கிய மனுக்களை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு மனுவும் சுமார் 1,000 பக்கங்கள் கொண்டது. அதில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரியும், தங்களது சொத்துகளை பறிமுதல் செய்ய விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இது தவிர நால்வர் தரப்பிலும் தீர்ப்புக்கும்,தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தலா இரு இடைக்கால தடை மனுக்களையும் தாக்கல் செய்தனர்.அவர்களுடைய மனுக்கள் உடனே ஏற்கப்பட்டு பதிவெண்கள் (835,836,837,838) வழங்கப்பட்டன. ஜெயலலிதா தரப்பின் இந்த மனுக்களை நீதிபதி ரத்னகலா இன்று விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ''எனக்கு 66 வயதாகிற‌து. ஒரு பெண்ணாக இருப்பதால் சிறை தண்டனை மிகவும் கடினமானது. இது தவிர நீரிழிவு நோய், இதய கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

இதே போல ''பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி டி'குன்ஹா எனது வழக்கில் வருமான வரி தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை. நான் வழக்கு காலத்தில் (1991-96) சேர்த்த சொத்துகள் அனைத்தும் சட்ட விரோதமானவை அல்ல. என் மீது எந்த குற்றமும் கூறப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்''என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிறார் ராம் ஜெத்மலானி?

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிகுந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகிறார். இதற்காக லண்டனில் இருந்து அவர் பெங்களூர் வருகிறார். ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த தகவல்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப் பட்டுள்ளன.

பெங்களூர் வரும் ராம் ஜெத்மலானி சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசிக்கிறார். அதன் பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் மனு மீது வாதிட இருக்கிறார் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தசரா திருவிழாவையொட்டி, நாளை முதல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இன்று ஜெயலலிதாவை வெளியே கொண்டுவர வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி டி'குன்ஹா வழங்கிய தீர்ப்பை வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x