Last Updated : 03 Jun, 2019 11:46 AM

 

Published : 03 Jun 2019 11:46 AM
Last Updated : 03 Jun 2019 11:46 AM

தன் படங்களை, தானே தயாரிக்க விஷால் முடிவு

இனிமேல் தான் நடிக்கும் படங்களை, தானே தயாரித்து வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.

வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான படம் ‘அயோக்யா’. மே 10-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தன. ஆனால், பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட குளறுபடிகளால், மே 11-ம் தேதி இப்படம் வெளியானது.

மே 10-ம் தேதி வெளியாகாததால், படக்குழுவினருக்கு சில கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படமும் வெளியீட்டுப் பிரச்சினையில் சிக்கியது. அப்படத்தை விஷாலுடன் இணைந்து தயாரித்த நந்தகோபாலுக்கு இருந்த கடனால், சில கோடிகளை விட்டுக்கொடுத்தார் விஷால்.

‘துப்பறிவாளன்’ படத்தின்போது தரவேண்டிய தொகையைத்தான் ‘96’ வெளியீடு சமயத்தில் விஷால் கேட்டார். அதை, தான் கொடுப்பதாக விஜய் சேதுபதி அறிவித்து, பின்னர் விஷால் வேண்டாம் என நிராகரித்தது நினைவுகூரத்தக்கது.

தற்போது, வெளி தயாரிப்புகளில் நடிப்பதால், தனக்குத் தொடர்ச்சியாக சிக்கல்கள் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளார் விஷால். இனிமேல், தான் நடிக்கும் படங்களை, தானே தயாரிப்பது என முடிவெடுத்துள்ளார். அதன்படி, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் படத்துக்குப் பிறகு, விஷால் நடிக்கும் அனைத்துப் படங்களுமே, அவரது தயாரிப்பாகவே இருக்கப் போகிறது.

வெளி நிறுவனங்களின் தயாரிப்புகளில் நடித்து, பட வெளியீட்டு சமயத்தில் சில கோடிகளை விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. அதைத் திரும்ப வாங்குவதற்குள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக விஷாலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x