Published : 21 Jun 2019 10:13 AM
Last Updated : 21 Jun 2019 10:13 AM

சசிகுமார், சரத்குமார் இணையும் ‘நானா’

சசிகுமாருடன் சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘நானா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சலீம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்ததாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷாவை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனாலும், பைனான்ஸ் பிரச்சினையால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில், சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்‌ஷன் அட்வெஞ்சராக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ‘நானா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘நாடோடிகள் 2’ ஆகிய இரு படங்களும் தயாராகிவிட்டாலும், ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்துள்ள சசிகுமார், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்கிறார். இதில், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x