Last Updated : 25 Jun, 2019 12:03 PM

 

Published : 25 Jun 2019 12:03 PM
Last Updated : 25 Jun 2019 12:03 PM

‘’ ‘படையப்பா’ எடுத்தீங்க; ரஜினியை வைச்சு ’பேயப்பா’ எடுக்கமாட்டீங்களா?’’ - பேய்க்கதை சொன்ன கிரேஸி; கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ச்சி

‘’படையப்பா எடுத்தீங்க. ரஜினியை வைச்சு பேயப்பா எடுக்கலாமே என்று கிரேஸி மோகன் பேய்க்கதை சொன்னார்’’ என்று கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

நாடக உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் தன் எழுத்துகளால் தனிமுத்திரை பதித்த கிரேஸி மோகன் சமீபத்தில் காலமானார். அவருக்கு நாடக்த்துறை சார்பில், புகழஞ்சலிக் கூட்டம் நேற்று 24ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கானசபாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:

‘’எனக்கும் கிரேஸி மோகனுக்கும் 25 வருடப் பழக்கம் உண்டு. ஐந்தாறு படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். என்றாலும், எங்கள் நட்பு மிகவும் ஆழமானது. முக்கியத்துவம் வாய்ந்தது. எங்கள் வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சி என்றால் கிரேஸி மோகன் குடும்பத்தோடு கலந்துகொள்வார். அதேபோல் அவர் வீட்டில் ஏதேனும் விழா என்றால், நான் குடும்பத்துடன் கலந்துகொள்வேன்.

கமல் சாரும் நானும் முன்பெல்லாம் அடிக்கடி பேசிக்கொள்வோம். மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல், பணிகள் அதிகரித்ததால் அவர் பேசுவது குறைந்துவிட்டது. கிரேஸி மோகன் மறைவுச் செய்தி வந்தபோது, நான் ஹைதராபாத்தில் இருந்தேன். செய்தியைக் கேட்டதும், அப்படியே விக்கித்துப் போய் உட்கார்ந்துவிட்டேன். அப்போது கமல் சாரிடம் இருந்து போன் வந்தது. கிரேஸி மோகனைப் பற்றி ஒருமணிநேரம் பேசினார். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது, பல இடங்களில் நான் அழுதுவிட்டேன். பல இடங்களில், பேசமுடியாமல் கமல் சார் அழுதுவிட்டார்.

கமல் சார், கிரேஸி மோகன், நான் மூவரும் பேசும்போது, பாலசந்தர் சார், நாகேஷ் சார் இருவரைப் பற்றியும் பல விஷயங்களைப் பேசுவோம். ‘இப்போது அவர்களின் இடத்துக்கு மோகனும் போய்விட்டார் என்று கமல் சொன்னார்.

ஒருமுறை, ரஜினி முழு காமெடிப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ’ரஜினி ஆசைப்படுறார். ஒரு கதை பண்ணுவோமா?’ என்றார் கிரேஸி மோகன். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘ஒரு பேய்க்கதை பண்ணினால் என்ன?’ என்று கேட்டார் கிரேஸி மோகன்.

உடனே நான், ‘ரஜினி சாரோட ஆடியன்ஸ் வேற எதிர்பார்ப்போட படத்துக்கு வருவாங்க. அவருக்கு இந்தப் பேய்க்கதையெல்லாம் செட்டாகாது சார்’என்று சொன்னேன். நான் சொல்லி முடிக்கக்கூட இல்லை... உடனே கிரேஸி மோகன், ‘ரஜினியை வைச்சு ’படையப்பா’லாம் எடுக்கறீங்க. ஏன்... ’பேயப்பா’ எடுக்கமாட்டீங்களா? என்று டைமிங்ரைமிங்காக கேட்டார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. எப்படி இந்த மனிதர், உடனுக்குடன் பளிச்பளிச்சென்று பதில் சொல்கிறாரே என்று வியந்துபோனேன்.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x