Last Updated : 13 Jun, 2019 03:57 PM

 

Published : 13 Jun 2019 03:57 PM
Last Updated : 13 Jun 2019 03:57 PM

மோகன்... ஏண்டா போனே? ; கிரேஸி மோகன் தெய்வப்பிறவி’’ - கவிதாலயா’ கிருஷ்ணன் உருக்கம்

‘’மோகன்... ஏண்டா போனே? இவ்ளோ சீக்கிரத்துல ஏன் போனே?’’ என்று கிரேஸி மோகனின் இழப்பால் தவித்துக் கலங்குகிறார் கவிதாலயா கிருஷ்ணன்.

நாடக கதாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் சமீபத்தில் திடீர் மாரடைப்பால் காலமானார். நடிகர் ‘கவிதாலயா’ கிருஷ்ணன் கிரேஸி மோகனின் இழப்பு குறித்து தனியார் இணையதளச் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கிரேஸி மோகனுக்கு எப்போ போன் செய்தாலும் ‘என்னடா கிருஷ்ணா... சொல்லுடா கிருஷ்ணா’ன்னு ரைமிங்கா சொல்லுவான். என் குருநாதர் கே.பாலசந்தர் சாரும் அப்படித்தான். ‘என்னடா கிருஷ்ணா’ன்னுதான் கேப்பார். பாலசந்தர் சார் இப்போ இல்ல... அதனால அவருக்கு போன் பண்ணமுடியாது. பண்ணினாலும் அவர் எடுக்கமுடியாதுன்னு நான் உணர்றதுக்கு ரொம்பகாலமாச்சு. இதோ... இப்ப மோகன். உங்களுக்கெல்லாம் அவன் கிரேஸி மோகன். எனக்கு அவன் மோகன்தான். காலேஜ்ல படிக்கும் போதிருந்தே தெரியும். கிண்டி காலேஜுக்கு நான் மயிலாப்பூர்ல பஸ் ஏறுவேன். அவன் மந்தவெளில ஏறுவான். அப்படியே பழக்கமாச்சு.

ஒருநாள்... ‘டேய் கிருஷ்ணா... நம்ம காலேஜுக்காக ஒரு டிராமா எழுதுறேன். நீயும் அதுல நடிக்கிறே’னு சொன்னான். அப்படியே நடிக்கவைச்சான்.

இன்னிக்கி நல்ல நிலைமைல நான் இருக்கேன்னா, பேட்டி, கட்டுரைன்னு நீங்க எல்லாரும் வர்ற அளவுக்கு நான் வளர்ந்திருக்கேன்னா... அதுக்கு முழுமுதல் காரணம் கிரேஸிமோகன்.

ரொம்ப நல்லவன் அவன். கோபமே வராது அவனுக்கு. எதுக்குமே கோபப்பட மாட்டான். நடிக்கும் போது எதுனா தப்புப் பண்ணிட்டா, திட்டமாட்டான். களுக்குன்னு சிரிச்சிருவான். ‘’என்னடா கிருஷ்ணா... ஏண்டா இப்படி சொதப்புறே?’ன்னு சொல்லிக் கிண்டல் பண்ணுவான்.

அவன் வசனம் எழுதுற படத்துல நான் ஒரேயொரு சீன்லயாவது நடிக்கணும். அதுல அவனுக்கு ஒரு செண்டிமெண்ட். சில பேர் ஒத்துக்குவாங்க. சில பேர் மாட்டேன்னு சொல்லிருவாங்க. அதுக்காக நான் வருத்தப்படமாட்டேன். ஆனா எனக்கு வாய்ப்பு தரமுடியலியேனு அவன் கலங்கிப் போயிருவான்.

இன்னிக்கி நான் சரியாப் பேசுறேனா இல்லியானு சொல்றதுக்கு என் நண்பன் இல்ல. அவனும் அவன் தம்பி பாலாஜியும் அவங்களோட கிரேஸி கிரியேஷன்ஸும் சேர்ந்து பண்ணின உதவியால பலன் அடைஞ்சவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அப்படிக் கொடுக்கறதையெல்லாம் யார்கிட்டயும் சொல்லிக்கிட்டிருக்கமாட்டான். கிரேஸி மோகன் தெய்வப்பிறவி சார்.

டேய் மோகன்... என்னடா இது. ஏண்டா போயிட்டே? இப்படி தடக்குன்னு போயிட்டியேடா...’’

இவ்வாறு கவிதாலயா கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x