Last Updated : 16 Jun, 2019 05:24 PM

 

Published : 16 Jun 2019 05:24 PM
Last Updated : 16 Jun 2019 05:24 PM

லட்சுமி பாம் படத்தை இயக்க லாரன்ஸே சிறந்த நபர்: கியாரா அத்வானி

'லட்சுமி பாம்' படத்தை இயக்க லாரன்ஸே சிறந்த நபர் என்று கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’, வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில், அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை முதலில் ராகவா லாரன்ஸ் இயக்கினார். பின்பு படக்குழுவினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் லாரன்ஸ் விலகினார். பின்பு, படக்குழுவினர் வந்து நடத்திய பேச்சுவார்த்தையால் மீண்டும் லாரன்ஸ் இயக்க முடிவு செய்துள்ளார்.

மீண்டும் 'லட்சுமி பாம்' படத்தை லாரன்ஸே இயக்கவுள்ளது குறித்து கியாரா அத்வானி, “லாரன்ஸ் சார் மறுபடியும் இந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன்.  அவரும் அப்படியே சம்மதித்தார்.  அவரே இந்தப் படத்தை இயக்க மிகச் சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது.

மேலும் லாரன்ஸ் மாஸ்டர்  ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர்.  இந்தப் படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

'லட்சுமி பாம்' படத்தைத் தொடர்ந்து கியாரா அத்வானி, அக்‌ஷய் குமார் நடிக்கும் 'குட் நியூஸ்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கரீனா கபூரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x