Last Updated : 18 Jun, 2019 01:12 PM

 

Published : 18 Jun 2019 01:12 PM
Last Updated : 18 Jun 2019 01:12 PM

கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்: சேரன் காட்டம்

ஒரு பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால் என்று இயக்குநர் சேரன் காட்டமாகப் பேசியுள்ளார்.

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு, வருடந்தோறும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி வந்துவிட்டதால், அவர்களால் வழங்க இயலவில்லை. இந்த ஆண்டு, நலிந்த தயாரிப்பாளர்களின் 26 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஒட்டுமொத்தமாக 5 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ‘அந்தத் தொகையை நான் தருகிறேன்’ என்று நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் போட்டியிடும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்புக்கொண்டார்.

அந்தப் பணத்தை, விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், தயாரிப்பாளர்கள் கேயார், சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

''3 ஆண்டுகளுக்கு முன்பு, அனுபவம் இல்லாத ஆட்களை உட்கார வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவோம் என்று சொன்னேன். படத்தில் சண்டையிடுவது போல அனைவருடன் சண்டையிட்டு வந்து விஷால் உட்கார்ந்துவிடவில்லை. அவருக்கு நம் உறுப்பினர்கள் தான் வாக்களித்தோம்.

ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்க யோசிக்கிறோம், இறுதியில் தவறாக ஒருவரைத் தேர்வு செய்கிறோம். அது நாட்டுக்கும் சரி, நமக்கும் சரி. இந்த முறையாவது நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சரியான தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே திரையுலகை இனிமேலாவது காப்பாற்ற முடியும். நாம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம். அனைத்து தயாரிப்பாளர்களுமே நஷ்டத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத்தான் கொஞ்சம் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் இங்கு அமர வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அனுபவமில்லாத ஒருவர் தலைவராக வந்து அமர்ந்ததால், இவ்வளவு பெரிய பிரச்சினையைச் சந்தித்துவிட்டோம். சிந்தனையில்லாதவர்களை அமர வைத்தால், நாம் தான் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 200 புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். வந்து நஷ்டப்பட்டு, அனைத்தையும் இழக்கிறார்கள். அப்படியிருக்கும் போது எதற்கு தயாரிப்பாளர் சங்கம். 10 நடிகர்கள், 10 தயாரிப்பாளர்களை மட்டும் காப்பாற்றுவதற்கு சங்கம் கிடையாது. முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டுமென்றால், தலைவராக அமர்பவர் முக்கியமானவராக இருக்க வேண்டும்.

அதற்கு பாரதிராஜா சார் வழிவகை செய்ய வேண்டும். ஏன் அவரே தலைவராக வர வேண்டும். அவரை சூழ்ச்சி செய்து, இயக்குநர் சங்கத் தலைவராக உட்கார வைத்துவிட்டார்கள். இயக்குநர்கள் சங்கத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தயவுசெய்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக அமருங்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பாரதிராஜா சாரும், நடிகர் சங்கத் தலைவராக பாக்யராஜ் சாரும் வரவேண்டும். அப்படி வந்துவிட்டால், 2 ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகம் மாறும்.

இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் கூட தோற்றுப் போய்க்கொண்டுத்தான் இருக்கிறது. வருமானத்தைப் பெருக்க பல்வேறு திட்டங்களை போன முறை தேர்தலுக்குப் போட்டோம். அதை யாரும் படித்துக் கூடப் பார்க்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலே சொல்லி, நின்று, ஜெயித்து, கெட்ட பெயர் வாங்கி ஒதுங்கிவிட்டார். இதற்கு மேலும் விஷாலுக்கு ஓட்டு போட்டால் நமக்கு சூடு சொரணை இல்லை என்று அர்த்தம்.

ஒரு பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால். இந்தச் சங்கத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்தால், அதற்கு பதில் கூட கொடுக்க முடியாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இருந்தது. அவ்வளவு கேடு கெட்ட நிர்வாகமாக இருந்தது. மீண்டும் விஷால் தலைவராக நின்றாலே, ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. எங்களுக்கு அவர் வேண்டாம்''.

இவ்வாறு சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x