Published : 11 Jun 2019 04:52 PM
Last Updated : 11 Jun 2019 04:52 PM
சராசரி மனிதனின் பசி, வலி, காதல், சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் எனது படங்களின் வில்லன்கள் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
காரைக்கால், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல படங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார்.
இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ‘ஜிப்ஸி’ பற்றி பேட்டியளித்த ராஜு முருகன், “படப்பிடிப்பு நாட்கள் அதிகமென்பதால், இது பெரிய பட்ஜெட் படம். எங்கள் பயணமே படத்தின் பெரும்பகுதி பட்ஜெட்டை விழுங்கிவிட்டது என நினைக்கிறேன். நாங்கள் எவ்வளவு சிறப்பாகத் திட்டமிட்டும், இந்தப் படத்துக்கான செலவு இதுதான். இப்படித்தான் இதைப் படமாக்கியிருக்க முடியும்.
ஜிப்ஸி மக்களை, ஒரு குறிப்பிட்ட மதம், மொழி, சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் பிரிக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைப் பற்றிய படமும் அல்ல. சினிமாவை மக்களுடன் பேச ஒரு இடமாகத்தான் நான் பார்க்கிறேன். எனது படங்கள், சமூக அரசியலைப் பற்றி மட்டுமே பேசியுள்ளன. இந்தப் படம் மனிதத்தைப் பற்றியது, அரசியலைப் பற்றியது அல்ல.
ஒரு குறிப்பிட்டக் கதாபாத்திரம், ஒரு மாநில முதல்வரைப் போல இருக்கிறதென்றால், அது மக்கள் எனது படங்களை, கதாபாத்திரங்களை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே. சராசரி மனிதனின் பசி, வலி, காதல், சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் எனது படங்களின் வில்லன்கள். அதிகாரத்தைக் கொண்டு மக்களைப் பிரிக்க நினைப்பவர்களை என் படம் கேள்வி கேட்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT