Last Updated : 02 Jun, 2019 06:20 PM

 

Published : 02 Jun 2019 06:20 PM
Last Updated : 02 Jun 2019 06:20 PM

வசூல் ரீதியாக மகரிஷி பெரும் சாதனை

உலகளவில் திரையரங்க ஷேர் தொகை 100 கோடியைத் தாண்டி விட்டதாக, 'மகரிஷி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தெரிவித்துள்ளார்

வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு, அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் 'மகரிஷி'. மே 9-ம் தேதி வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகேஷ் பாபுவின் 25-வது படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புடனே இந்தப் படம் வெளியானது. 4 நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. இப்போதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் என பலருமே பாராட்டினார்கள்.

தற்போது, மகேஷ் பாபு படங்களிலேயே அதிக வசூல் செய்த படம்  'மகரிஷி' தான் என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தெரிவித்துள்ளார். 'பாகுபலி 2', 'பாகுபலி', 'ரங்கஸ்தலம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'மகரிஷி' படம் வசூல் ரீதியில் இடம்பெற்றுள்ளது.

உலகளாவிய வசூல் ஷேர் தொகை மட்டும் 100 கோடியைத் தாண்டியிருப்பதாகவும், நிசாம் விநியோக ஏரியாவில் மட்டுமே இந்தப் படம் 30 கோடியளவுக்கு வசூல் செய்திருப்பதாகவும் தில் ராஜு கூறியுள்ளார். சமீபத்தில் 'மகரிஷி' படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில், உலகளவில் 175 கோடி வசூலைத் தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது நினைவுக் கூரத்தக்கது.

'மகரிஷி' படத்தைத் தொடர்ந்து அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் 'சரிலேரு நீக்கெவரு' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ் பாபு. அனில் சுங்கரா, தில் ராஜு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2020-ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x