Published : 06 Jun 2019 12:38 PM
Last Updated : 06 Jun 2019 12:38 PM

‘ஹிப்பி’ உருவான கதை: இயக்குநர் கிருஷ்ணா பேட்டி

‘ஹிப்பி’ தெலுங்குப் படம் உருவானது எப்படி? எனப் பேட்டி தந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா.

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் கிருஷ்ணா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ். 100’ நாயகன் கார்த்திகேயா நடிப்பில் ‘ஹிப்பி’ படத்தை இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ள இந்தப் படம் குறித்தும், ஏன் தமிழில் படம் இயக்கவில்லை? என்பது குறித்தும் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, “அவனுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்யக்கூடியவன் தான் ‘ஹிப்பி’. இதனால் என்னவாகும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை எல்லாம் யோசிக்க மாட்டான்.

ஜான் மில்டன் என்ற கவிஞர் எழுதிய வார்த்தைகள் என்னை ரொம்பவே ஈர்த்தன. ‘ஒரு பெண்ணை நாம் காதலித்தால், அந்த உணர்வே நமக்கு சொர்க்கம் மாதிரி. அந்தப் பெண் நமது காதலை ஒப்புக்கொண்டு, நம்மைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், சொர்க்கம் தொலைந்தது மாதிரி. அந்தப் பெண் உன் காதலை விட்டுவிட்டுப் போய்விட்டால், உனக்கு சொர்க்கம் மீண்டது மாதிரி’ என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வரிகள் ரொம்ப நாளாகவே உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எனவே, கவிஞர் ஜான் மில்டன் எழுதியதை படிக்கத் தொடங்கினேன். ஆதாம் - ஏவாளை சம்பந்தப்படுத்தி அவர் அந்தக் காலத்தில் எழுதியிருந்தார். அது இப்போது இருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் செய்த படம்தான் ‘ஹிப்பி’.

தாணு சார் இந்தக் கதையைக் கேட்டதும், ரொம்பவே ரசித்தார். ‘என்னை யாரும் அவ்வளவு எளிதில் சிரிக்க வைக்க முடியாது. நீ என்னை முழுக்கதையிலேயே சிரிக்க வைத்துவிட்டாய். இந்தப் படம் பண்ணலாம்’ என்று உற்சாகமூட்டினார்.  சில நடிகர்களிடம் பேசினோம். அது சரியாக அமையவில்லை. அந்தத் தருணத்தில் ‘ஆர். எக்ஸ். 100’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய அணுகினர். அந்தப் படத்தைப் பார்த்தவுடன், நாயகன் கார்த்திகேயாவிடம் பேசினேன். ‘சில்லுனு ஒரு காதல்’ தெலுங்கில் பெரிய வெற்றி என்பதால், நான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்று உற்சாகமாகப் பேசினார். இருவரும் சந்தித்தோம். அப்போதுதான் ‘ஹிப்பி’ கதையைச் சொன்னேன். எனது அடுத்த படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றார். தாணு சாரிடம் சொன்னவுடன், ‘இந்தப் படத்தை எந்த மொழியில் எடுத்தாலும் நானே தயாரிக்கிறேன்’ என்று தெலுங்கில் தயாரித்தார்.

ஒரு படம் வெற்றியோ, தோல்வியோ... இயக்குநருடைய திறமையின் அளவை எப்படி தமிழ்த் திரையுலகில் மதிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. சில படங்கள் பிரமாதமாகப் போகும், சில படங்கள் போகாது. நன்கு ஓடிய படத்தில் எந்தவொரு கதையுமே இருக்காது. ஓடாத படத்தில் நல்ல கதை இருக்கும். சுமாராக ஓடிய படத்தின் இயக்குநரை அணுகலாமே என்ற விஷயம் யாருக்குமே வருவதில்லை. ரொம்ப சில ஹீரோக்களுக்கு மட்டுமே இது தோன்றுகிறது. ஒரு படம், பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. விமர்சன ரீதியாக என்னதான் பெரிய படமாக இருந்தாலும், யாருமே ஒப்புக் கொள்வதில்லை. அது மிகவும் தவறானது.  என் அடுத்த படமும் தெலுங்குப் படமாகத்தான் இருக்கும். தாணு சார் தான் தயாரிப்பார் என நினைக்கிறேன். நான் கூறிய இன்னொரு கதையும் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் - தெலுங்கு பண்ணலாம் என்று சொல்லியிருக்கார்” என்று தெரிவித்தார் கிருஷ்ணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x