Published : 19 Jun 2019 04:29 PM
Last Updated : 19 Jun 2019 04:29 PM

விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் மகிழ் திருமேனி

இயக்குநர் மகிழ் திருமேனி, விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.

‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ மற்றும் ‘தடம்’ என நான்கு படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. செல்வராகவன் மற்றும் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள இவர், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் பேசியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படத்தில், நடிகராக அறிமுகமாகிறார் மகிழ் திருமேனி. விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் இவர், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் முதன்முதலாக நடிக்கிறார் என்பதால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கெளதம் மேனன்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.

இந்தப் படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான பிரச்சினை பேசப்படவுள்ளது.  இதில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x