Last Updated : 15 Jun, 2019 11:00 AM

 

Published : 15 Jun 2019 11:00 AM
Last Updated : 15 Jun 2019 11:00 AM

வீடியோ விளம்பர சர்ச்சை: ராதிகா - வரலட்சுமிக்கு விஷால் பதிலடி

வீடியோ விளம்பர சர்ச்சை தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரின் அறிக்கைக்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி களமிறங்குகிறது. இரு அணிகளுமே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக சாடியிருந்தார்கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரது முகமும் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இந்த வீடியோ பதிவு தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் விஷாலைக் கடுமையாக சாடியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 14) மாலை கமலைச் சந்தித்து ஆதரவு கோரியது பாண்டவர் அணி. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது வீடியோ விளம்பரம் தொடர்பாக ராதிகா மற்றும் வரலட்சுமி இருவரும் சாடியிருப்பது தொடர்பாக விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விஷால், “முந்தையத் தேர்தலில் ’நாங்கள் என்ன செய்யவில்லை’ என்று ராதிகா பேசினார். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. நாங்கள் என்ன செய்தோமோ அதை வீடியோவில் காட்டியுள்ளோம். தவறு செய்திருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதைத்தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.

வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாகச் சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதைச் சொல்வதற்கு உரிமையுள்ளது.

ஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை தர வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார் விஷால்.

மேலும், கமலுடனான சந்திப்பு குறித்து விஷால், “நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரைச் சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது.

எங்களுக்குள் பிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து நடிகர்களும் ஒன்றாகச் சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம். ஓட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத்தான் பழகி வருகிறோம். ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.

நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை உறுப்பினர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவ உதவி, கல்வி உதவி, நிதியுதவி, பென்ஷன் என உதவிகள் செய்கிறோம். இந்தக் கட்டிடம் ஏன் நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ பேர் தடை போட்டார்கள். அதனால் எத்தனை நாள் பணிகள் நின்றது என்பது தெரியும்” என்று விஷால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x