Last Updated : 02 Jun, 2019 06:19 PM

 

Published : 02 Jun 2019 06:19 PM
Last Updated : 02 Jun 2019 06:19 PM

வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல சூரரைப் போற்று: சூர்யா

வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல 'சூரரைப் போற்று' என்று சூர்யா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

'என்.ஜி.கே', 'காப்பான்' படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூரரைப் போற்று'. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கி வருகிறது படக்குழு. தனது 2டி நிறுவனம் மூலம் 'சூரரைப் போற்று' படத்தை தயாரித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படம் குறித்து சூர்யா, “வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்த விஷயங்கள் எங்களை ஈர்த்தது. அதை பெரிய திரைக்கு ஏற்றவாரு சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். 'ஆயுத எழுத்து' படத்தில் நான் நடித்த காலத்திலிருந்தே இயக்குநர் சுதாவுக்கும் எனக்கும் நட்புண்டு. அவர் எனக்கு ராக்கி கட்டும் சகோதரி. அவரது திறமை மிது அதிக மரியாதை உண்டு. இந்தப் படம் ஆரம்பிக்க அவர்  3 வருடங்கள் காத்திருந்தார்.

சுதா கொங்கராவுடன் படம் பண்ணுவது சந்தோஷமாகவுள்ளது. 'இறுதிச்சுற்று' படம் சமயத்திலேயே அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என விரும்பினேன். ஒரு படம் பண்ணுவதற்கு அவருக்குள் இருக்கும் பசி மிகவும் பெரியது. அது உடனே அமைந்ததில் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x