Published : 31 Mar 2018 01:24 PM
Last Updated : 31 Mar 2018 01:24 PM

“5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன்” - இயக்குநர் சுசீந்திரன்

‘இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன்’ என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் சுசீந்திரன்.

இந்நிலையில், இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

“இன்று (மார்ச் 31) எனது பிறந்த நாள். இன்று ஹோலி சனிக்கிழமை என்பதால், நாளை எனது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளேன். இன்றுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை.

அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால், அந்த பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

பந்து எவ்வளவு வேகமாக தரையில் எறியப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகப் பந்து மேலே எழும் என்பது அனைவருக்கும் தெரியும். எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்துப் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான், கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல).

இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும், 5 புதிய ஹீரோக்களையும் அறிமுகப்படுத்துகிறேன். எனது முதல் படம் ‘ஏஞ்சலினா’, இரண்டாவது படம் ‘ஜீனியஸ்’. இரண்டு படங்களும் நிறைவடைந்துள்ளன. எனது மூன்றாவது படம் ‘சாம்பியன்’, ஃபுட்பால் பற்றியது. ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்தப் படத்தைத் தொடங்க உள்ளேன். மற்ற இரண்டு படங்களின் தலைப்புகள், மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.

இந்த வருடம் முழுக்க முழுக்கப் புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப் போகிறேன். எனது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x