Last Updated : 02 Mar, 2018 01:02 PM

 

Published : 02 Mar 2018 01:02 PM
Last Updated : 02 Mar 2018 01:02 PM

திரையுலக சங்கங்களின் கெடுபிடி: என்ன செய்யப் போகிறார் வடிவேலு?

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிரச்சினைத் தொடர்பாக திரையுலக சங்கங்களின் கெடுபிடியால், வடிவேலு என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினைக் குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம்.

இறுதியாக இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தரப்பிலிருந்து தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளரும் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து "வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்" என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவால் வடிவேலு தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதனால், விரைவில் எவ்வித நிபந்தனையுமின்றி வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x