Published : 08 May 2019 05:19 PM
Last Updated : 08 May 2019 05:19 PM

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

இதைத் தொடர்ந்து, ‘மரக்கார்: அபிரக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், சுனில் ஷெட்டி, சுதீப், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு, சுஹாசினி மணிரத்னம் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

அத்துடன், இந்தியிலும் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தை அமித் சர்மா இயக்குகிறார். மேலும், நரேந்திரநாத் இயக்கத்தில் ஒரு படம், நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு தெலுங்குப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த லிஸ்ட்டைப் பார்த்தால், கீர்த்தி சுரேஸுக்கு இந்த ஆண்டு ஒரு படம் கூட தமிழில் ரிலீஸாகாது.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச், கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அறிமுக இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். எனவே, அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் தமிழ்ப்படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், ஜெயம் ரவியின் 25-வது படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தேதிகள் இல்லாததால் மறுத்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x